பாஜக விரித்த 'மெகா' வலை.. மகளிர் மசோதா "நிறைவேறினாலும் வெற்றி.. நிறைவேறாவிட்டாலும் வெற்றி தான்!"
டெல்லி: நாடாளுமன்றத்தில் பெண்கள் இட ஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுசீரமைப்பு, மகளிர் இட ஒதுக்கீடு தொடர்பாக நாடாளுமன்றத்தில் 4 மணிக்கு வாக்கெடுப்பு நடக்கவிருந்த நிலையில், அது தாமதமானது. இந்த மசோதா நிறைவேறினாலும் பாஜகவுக்கு வெற்றி.. நிறைவேறவில்லை என்றாலும் பாஜகவுக்கு வெற்றி என்ற சூழலே இருக்கிறது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
நாடாளுமன்றத்தில் இப்போது பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா மற்றும் தொகுதி மறுசீரமைப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த விவாதத்தில் பேசிய பிரதமர் மோடி, "நம்பர்களின் ஆட்டத்தைக் காலம்தான் தீர்மானிக்கும்" என்று குறிப்பிட்டார். 2029 லோக்சபா தேர்தலுக்கு முன்னர் பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுசீரமைப்பைக் கொண்டு வர இந்த நம்பர் மிகவும் முக்கியமானவை. ஆனால், இவை தான் பிரச்சனைக்கும் காரணம்.

பெரும்பான்மை தேவை
ஏனென்றால் இந்த மசோதா நிறைவேற வெறுமன பெரும்பான்மை போதாது.. மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை. ஆனால், பாஜகவுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை ஆதரவு இல்லை. அப்படியென்றால், ஏன் அரசு இந்த சீர்திருத்தத்தை இவ்வளவு அவசரமாக முன்னெடுக்கிறது? இந்த மசோதா விவகாரத்தில் பாஜக இப்போது ஒரு தனித்துவமான நிலையில் உள்ளது. அதாவது இந்த சட்ட மசோதா நிறைவேறினால், அது அவர்களுக்கு வெற்றி.
மசோதா நாடாளுமன்றத்தில் தோல்வியடைந்தாலும், அது ஒரு வெற்றியாகவே மாறிவிடும். ஏனெனில், பெண்களுக்கு நியாயமான பங்கை மறுத்ததற்காக எதிர்க்கட்சிகள் மீது பழிபோட முடியும். பிரதமரின் பேச்சிலேயே இந்த வியூகம் வெளிப்பட்டது. இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்களை நாட்டின் பெண்கள் மன்னிக்க மாட்டார்கள் என அவர் எதிர்க்கட்சிகளை எச்சரித்தார். தேர்தலில் வாக்களிக்கச் செல்லும் போது இந்த விவகாரம் முக்கியப் பங்கு வகிக்கும் என்பதையும் அவர் மறைமுகமாகச் சுட்டிக்காட்டினார்.
பிரதமர் மோடி
இது தொடர்பாக அவர், "அரசியல் ரீதியாக மட்டுமே சிந்திப்பவர்களுக்கு நான் ஒரு அறிவுரை கூற விரும்புகிறேன். நம் நாட்டில் பெண்கள் இட ஒதுக்கீடு குறித்த விவாதம் தொடங்கியதில் இருந்தும், அதைத் தொடர்ந்து வந்த ஒவ்வொரு தேர்தலிலும், பெண்களுக்கு இந்த உரிமையை யார் எதிர்த்தார்களோ, அவர்களை நாட்டின் பெண்கள் ஒருபோதும் மன்னித்ததில்லை" என்று மோடி குறிப்பிட்டார்.
பின்னணி
2010ல் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை எதிர்த்த சமாஜ்வாடி கட்சி மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிகளைக் குறிப்பிட்டுத் தான் மோடி இதைச் சொன்னார். இக்கட்சிகளின் அரசியல் செல்வாக்கு மிகப் பெரியளவில் சரிந்துள்ளது. 2010ல் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகளில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு கொண்டுவர முயன்றது. அப்போது, யுபிஏ அரசில் முக்கிய அங்கமாக இருந்த சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஆகியோர் இந்த நடவடிக்கையை எதிர்த்து, மசோதாவை கைவிட வைத்தது குறிப்பிட்டதக்கது.
எதிர்க்கட்சிகள்
நேற்று வியாழக்கிழமை ஆற்றிய தனது உரையில், பெண்கள் தங்கள் உரிமைகளை எதிர்க்கட்சிகளால் மறுக்கப்படுவதாகவும், தனது அரசு அவர்களுக்காகப் போராடுகிறது எனவும் மோடி குறிப்பிட்டார். இதை எதிர்க்கட்சிகளும் உணர்ந்துள்ளன. இதன் காரணமாகவே எதிர்க்கட்சி தலைவர்கள் பேசும்போது, தாங்கள் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை ஆதரிக்கிறோம்.. தொகுதி மறுசீரமைப்பை மடடுமே எதிர்க்கிறோம் என்பதைக் காங்கிரஸ் எம்பிக்கள் திரும்பச் திரும்ப சொல்லி வருகிறார்கள்.
பாஜக தங்களை ஒரு இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளியுள்ளது என்பதை எதிர்க்கட்சிகள் அறிந்திருக்கின்றன. 33% பெண்களுக்கு இட ஒதுக்கீடுக்கு வழிவகுக்கும் மூன்று மசோதாக்களையும் ஆதரித்தாலும் சரி, எதிர்த்தாலும் சரி, அது அவர்களுக்கு இழப்பாகவே இருக்கும். இதன் காரணமாகவே பிரியங்கா காந்தி பேசும்போது, சாணக்கியன் உயிரோடிருந்தால், உங்களின் இந்த தந்திரத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்திருப்பார்" என்று குறிப்பிட்டார். அமித் ஷாவும் இதைக் கேட்டுப் புன்னகைத்தார்.
தேர்தல்
அடுத்த வாரம் தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் தேர்தல் நடக்கும் நிலையில், இந்த நேரத்தில் நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடர் கூட்டப்பட்டத்தையும் எதிர்க்கட்சி எம்பிக்கள் கேள்விக்குள்ளாக்கினர். குறிப்பாக மேற்கு வங்கத்தில் பெண் வாக்காளர்களை மம்தா பக்கம் உள்ள நிலையில், அவர்களைக் கவரவே பாஜக இதைச் செய்வதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இது தொடர்பாக திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. ககோலி கோஷ் தஸ்திதார், "இந்த மசோதாக்களை அரசு ஏன் முன்னரே கொண்டுவரவில்லை? சட்டமன்றத் தேர்தல்கள் (மேற்கு வங்காளம் மற்றும் தமிழ்நாடு) நடைபெறும்போது இவ்வளவு அவசரம் ஏன்? பெண்கள் இட ஒதுக்கீடு என்பது தேர்தல் நடைமுறையை மாற்றுவதற்கும், ஜனநாயகத்திற்குத் தீங்கு விளைவிப்பதற்கும் ஒரு மறைப்பு" என்று சாடினார்.
வென்றாலும் தோற்றாலும் பாதிப்பு
அதாவது சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் இந்த மசோதாக்கள் வெற்றி அடைந்தால் அது பாஜகவுக்கு வெற்றி..! மசோதாக்கள் தோல்வி அடைந்தாலும் எதிர்க்கட்சிகள் மீது பழியைப் போட முடியும் என்பதால் அதுவும் பாஜகவுக்கே வெற்றி. பெண்கள் சார்பான நடவடிக்கையை ஏன் எதிர்த்தார்கள் என்பதை விளக்க எதிர்க்கட்சிகளுக்கு மிகவும் கடினமாகிவிடும்.!












Click it and Unblock the Notifications