முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை ஏற்பு! எதிர்க்கட்சிகளின் ஜூன் 12 பாட்னா சங்கமம் ஒத்திவைப்பு!
டெல்லி: பீகார் மாநிலம் பாட்னாவில் ஜூன் 12-ந் தேதி நடைபெற இருந்த பாஜக அல்லாத எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஜேடியூ தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ்குமார் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்..
லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்த காங்கிரஸை உள்ளடக்கிய அனைத்து எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் பீகார் மாநிலம் பாட்னாவில் ஜூன் 12-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

பீகார் முதல்வரும் ஜேடியூ தலைவருமான நிதிஷ்குமார் இந்த எதிர்க்கட்சிகளின் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். இக்கூட்டத்தில் பாஜக அல்லாத எதிர்க்கட்சிகளின் தலைவர்களான மமதா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால், சரத்பவார் உள்ளிட்ட பலரும் வருகை தர ஒப்புதல் தெரிவித்திருந்தனர். ராகுல் காந்தி தற்போது வெளிநாட்டில் இருந்தாலும் காங்கிரஸ் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்பர் எனவும் தெரிவிக்கப்பட்டது.
அதேநேரத்தில் தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், ஜூன் 12-ந் தேதி தமிழ்நாட்டில் மேட்டூர் அணை திறப்பு நிகழ்ச்சி இருக்கிறது. அதில் பங்கேற்க வேண்டும். ஆகையால் ஜூன் 12-ந் தேதி பாட்னா கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டுகோள் விடுத்திருந்தார். இதேபோல காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும் ஜூன் 12-ந் தேதிக்கு பதில் வேறு ஒரு தேதியில் கூட்டத்தை நடத்தலாம் என யோசனை தெரிவித்திருந்தார்.
இதனை ஏற்று பாட்னாவில் ஜூன் 12-ந் தேதி நடைபெற இருந்த எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை ஜேடியூ தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ்குமார் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications