சட்டென ஃபோன் போட்ட ராகுல் காந்தி.. ஒரு மணி நேரம் உத்தவ் தாக்ரே உடன் பரபர ஆலோசனை.. என்ன மேட்டர்
டெல்லி: மிக விரைவில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மகாராஷ்டிராவில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக ராகுல் காந்தி நேரடியாக உத்தவ் தாக்கரே உடன் பேசியுள்ளார்.
காங்கிரஸ் கட்சி தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வதில் தீவிரம் காட்டி வருகிறது. ஏற்கனவே சமாஜ்வாதி மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளுடன் சமீபத்தில் தான் காங்கிரஸ் தனது தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்திருந்தது.

மகாராஷ்டிரா: காங்கிரஸ் வரிசையாகப் பல மாநிலங்களிலும் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி அடுத்தகட்டமாக மகாராஷ்டிராவில் தனது பார்வையைத் திருப்பி உள்ளது. மகாராஷ்டிராவில் மொத்தம் 48 இடங்கள் இருக்கும் நிலையில், அங்கே சிவசேனா (தாக்கரே)- என்சிபி (சரத் பவார்)- காங்கிரஸ் இடையே கூட்டணி அமைய உள்ளது. இதில் எட்டு இடங்கள் உடன்பாடு ஏற்படாததால் இழுபறி நிலவி வரும் நிலையில், இந்த விவகாரத்தில் நேரடியாக ராகுல் காந்தி தலையிட்டுள்ளார்.
ராகுல் காந்தி தொகுதிப் பங்கீடு தொடர்பாக நேற்று உத்தவ் தாக்கரேவுக்கு போன் செய்து பேசியுள்ளார். ராகுல் காந்தி இப்போது பாரத் ஜோடோ நியாக் யாத்திரையில் பிஸியாக இருக்கும் போதிலும், தொகுதிப் பங்கீடு தொடர்பாக அவர் உத்தவ் தாக்கரே உடன் சுமார் ஒரு மணி நேரம் பேசியதாகக் கூறப்படுகிறது.
என்ன சிக்கல்: மும்பையில் மொத்தம் ஆறு லோக்சபா தொகுதிகள் உள்ள நிலையில், அதில் தெற்கு மத்திய மும்பை, வடக்கு மத்திய மும்பை, வடமேற்கு மும்பை ஆகிய 3 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட விரும்புகிறது. அதேநேரம் மும்பை தெற்கு, வடமேற்கு மும்பை, வடகிழக்கு மும்பை மற்றும் தெற்கு மும்பை ஆகிய 4 லோக்சபா தொகுதிகளுடன் மாநிலத்தில் உள்ள 18 லோக்சபா தொகுதிகளில் உத்தவ் தாக்கரே கட்சி போட்டியிட விரும்புவதாகக் கூறப்படுகிறது.
மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 48 தொகுதிகளில் 40க்கு உடன்பாடு ஏற்பட்டுவிட்ட போதிலும். இன்னும் 8 தொகுதிகளில் உடன்பாடு ஏற்படவில்லை. இதன் காரணமாகவே ராகுல் காந்தி நேரடியாக உத்தவ் தாக்கரேவிடம் தொலைப்பேசியில் பேசியிருக்கிறார்.
களநிலவரம் என்ன: மகாராஷ்டிராவைப் பொறுத்தவரை அங்கே கடந்த 2019இல் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, முதல்வர் யார் என்பதில் குழப்பம் ஏற்பட்டதை அடுத்து 25 ஆண்டுக்கால பாஜக- சிவசேனா கூட்டணி முடிவுக்கு வந்தது. அதன் பிறகே சிவசேனா- என்சிபி- காங்கிரஸ் கட்சிகள் இணைந்து கூட்டணியை அமைத்தன. சுமார் 3 ஆண்டுகள் அங்கே இந்த கூட்டணி அரசு சுமூகமாகவே நடந்து வந்த நிலையில், 2022இல் அது மொத்தமாக மாறியது.
முதலில் சிவசேனா கட்சியின் ஷிண்டே கூட்டணி அரசுக்கு எதிராகக் கலகம் செய்தார். அவர் பாஜக உடன் கூட்டணியை அமைக்கவே தாக்ரே அரசு கவிழ்ந்தது. ஷண்டே முதல்வராக பதவியேற்றார். இதையடுத்து கடந்தாண்டு சிவசேனாவில் நடந்தது அப்படியே என்சிபி கட்சியிலும் நடந்தது. அஜித் பவார் தலைமையில் போர்க்கொடி தூக்கிய எம்எல்ஏக்கள் பாஜக கூட்டணியில் ஐக்கியமானார்கள். அஜித்பவார் துணை முதல்வராகப் பதவியேற்றார்.
காங்கிரஸ் நிலைப்பாடு: மகாராஷ்டிராவில் காங்கிரஸின் இரண்டு முக்கிய தலைவர்களான முன்னாள் முதல்வர் அசோக் சவான் மற்றும் மிலிந்த் தியோரா ஆகியோர் சமீபத்தில் பாஜகவுக்கு ஐக்கியமான நிலையில், சிவசேனா, என்சிபியில் நடந்ததை போலவே எங்கு தங்கள் கட்சியிலும் ஏற்படுமோ என்று காங்கிரஸ் அஞ்சுகிறது. மேலும், இரு முக்கிய தலைவர்கள் திடீரென விலகியது சீட் பேச்சுவார்த்தையைச் சிக்கலாக்கியுள்ளது. அதன் பின்னரே உத்தவ் தாக்கரே கட்சி, மும்பையில் அதிக தொகுதிகளைக் கேட்கத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.
மகாராஷ்டிராவில் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வதில் குழப்பம் தொடரும் போதிலும், உத்தவ் தாக்கரே, சரத் பவார், ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோர் தொகுதிப் பங்கீட்டை மிக விரைவாக இறுதி செய்வதில் உறுதியாகவே உள்ளனர்.












Click it and Unblock the Notifications