களேபரமான லோக்சபா! மஹுவா மொய்த்ராவின் எம்பி பதவி பறிப்பு.. எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு-போராட்டம்
டெல்லி: அதானி குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப பணம், பரிசு பொருட்கள் பெற்ற குற்றச்சாட்டில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ராவின் எம்பி பதவி அதிரடியாக பறிக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பை லோக்சபாவில் சபாநாயகர் ஓம்பிர்லா வெளியிட்ட நிலையில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்து நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தி வருகின்னர்.
மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக மம்தா பானர்ஜி உள்ளார். இந்நிலையில் தான் மேற்கு வங்க மாநிலம் கிருஷ்ணாநகர் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்பியானவர் மஹுவா மொய்த்ரா.

இவர் பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இந்நிலையில் தான் மஹுவா மொய்த்ரா லோக்சபாவில் அதானி விவகாரம் குறித்து எழுப்ப , தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானியிடம் இருந்து பணம், பல்வேறு பரிசுப் பொருட்களை லஞ்சமாக பெற்றதாக பாஜக எம்பி நிஷிகாந்த் துபே குற்றம்சாட்டினார்.
இது பெரிய பிரளயத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து நாடாளுமன்ற நெறிமுறைக்குழு விசாரணைக்கு லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா உத்தரவிட்டார். புகாரளித்த நிஷிகாந்த் துபே எம்பி மற்றும் புகாருக்கு உள்ளான மஹுவா மொய்த்ரா ஆகியோரை நேரில் அழைத்து நாடாளுமன்ற நெறிமுறைக்குழு விசாரணை நடத்தியது. இந்த விசாரணைக்கு பிறகு 479 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கை லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
அதில் மஹுவா மொய்த்ரா தொழிலதிபர் ஹிரா நந்தானியிடம் பணம், பரிசு பொருட்களை பெற்று கொண்டு அவரை கேள்வி எழுப்ப அனுமதித்ததாக கூறப்படுகிறது. இதற்காக மஹுவா மொய்த்ரா கேள்வி கேட்பதற்கான இணையதள விபரம், பாஸ்வேர்ட் உள்ளிட்டவற்றை அவரிடம் பகிர்ந்ததாக கூறப்பட்டு இருந்தது. அதோடு மஹுவா மொய்த்ரா எம்பியை பதவி நீக்கம் செய்யலாம் என பரிந்துரைக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் தான் இன்று மஹுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்வது தொடர்பாக நாடாளுமன்ற லோக்சபாவில் கடும் அமளிக்கு இடையே லோக்சபா நன்னடத்தை குழு தலைவரான பாஜகவின் வினோத் குமார் சோன்கர் தாக்கல் செய்தார். இதையடுத்து அந்த அறிக்கை மீது விரிவான விவாதம் நடத்த வேண்டும் என பகுஜன் சமாஜ் உள்பட எதிர்க்கட்சி எம்பிக்கள் கூறினர். மேலும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டு அமளி ஏற்பட்டது. இருப்பினும் மஹுவா மொய்த்ராவின் எம்பி பதவி பறிக்கப்படுவதாக லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா அறிவித்தார்.
இதையடுத்து எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் கோபமடைந்தனர். உரிய விசாரணை இன்றி விவாதம் நடத்தாமல் மஹுவா மொய்த்ரா மீதான இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது எனக்கூறி அவர்கள் வெளிநடப்பு செய்தனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி உள்பட பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சி எம்பிக்கள் அனைவரும் லோக்சபாவில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அதோடு நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு அவர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு தொடர்ந்து பரபரப்பான சூழல் ஏற்பட்டு நிலவியது.












Click it and Unblock the Notifications