ஆல்வாவுக்கு கார்கே அளித்த இரவு விருந்து.. கலகலப்பாய் பங்கேற்ற காங்கிரஸ், திமுக, கூட்டணி தலைவர்கள்
டெல்லி: குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் மார்க்ரெட் ஆல்வாவுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வழங்கிய இரவு விருந்தில் காங்கிரஸ், திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் கலந்துகொண்டனர்.
இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிகாலம் நிறைவடைவதை தொடர்ந்து நேற்று புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதேபோல் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடுவின் பதவிகாலமும் முடிவடைய இருப்பதால் வரும் ஆகஸ்டு 6 ஆம் தேதி குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
ஜூலை 6 ஆம் தேதி தொடங்கிய குடியரசுத் துணைத் தலைவருக்கான வேட்புமனுத் தாக்கல் ஜூலை 19 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும், காங்கிரஸ் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியும் தத்தமது வேட்பாளர்களை அறிவிக்க பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டனர்.
இது புதிய இந்தியா.. 'பெரிய அண்ணன்’ செல்போன் உரையாடலை ஒட்டுகேட்பார் என்று பயம் - மார்க்கரெட் ஆல்வா
பாஜக வேட்பாளர்
பாஜக சார்பில் வெங்கய்யா நாயுடு அல்லது முன்னாள் மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி உள்ளிட்டோர் நியமிக்கப்படலாம் என்ற பேச்சுக்கள் அடிபட்டு வந்தன. இந்த நிலையில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக மேற்கு வங்க மாநில ஆளுநர் ஜெகதீப் தங்கர் அறிவிக்கப்பட்டார்.
எதிர்க்கட்சிகள்
குடியரசுத் தலைவர் தேர்தலின்போது எதிர்க்கட்சிகளின் அணி பலமற்ற நிலையில், அவர்களுடன் இருந்தவர்களே பாஜகவின் திரௌபதி முர்முவுக்கு ஆதரவளிப்பதாக கூறின. இதனால் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் வேட்பாளரை நிறுத்துமா? என்பதே கேள்விக்குறியாக இருந்தது. ஆனால், இது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்துக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்தது. மறுபக்கம் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும் வேறொரு கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தது.
மார்க்கரெட் ஆல்வா
இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் மார்க்கரெட் ஆல்வா நிறுத்தப்பட்டார். வேட்புமனுத் தாக்கலின் கடைசி நாளான ஜூலை 19 ஆம் தேதி அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் டி.ராஜா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், திமுக எம்.பி. திருச்சி சிவா, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
Recommended Video
இரவு விருந்து
இந்த நிலையில் தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் மார்க்கரெட் ஆல்வாவுக்கு இரவு விருந்து வழங்கினார். இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், திமுக எம்.பி. திருச்சி சிவா, மற்றும் கூட்டாணி கட்சி தலைவர்கள், எம்.பிக்கள் கலந்துகொண்டனர்.