"சுதந்திரத்தை எதிர்த்ததே ஆர்எஸ்எஸ் தான்.." கார்கேவுக்கு வந்ததே கோபம்.. சரமாரி குற்றச்சாட்டு
டெல்லி: பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் ஆர்எஸ்எஸ் அமைப்பைப் பாராட்டிப் பேசியிருந்தார். இதற்கிடையே பிரதமர் மோடியின் இந்தப் பேச்சுக்குக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நாட்டின் விடுதலைக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பு எதிராகவே இருந்ததாகவும் மல்லிகார்ஜுன கார்கே சாடியுள்ளார்.
கடந்த வாரம் நாட்டின் 79ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றிய பிரதமர் மோடி, அங்கிருந்தபடி நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது அவர் பல்வேறு விஷயங்கள் குறித்தும் பேசினார். குறிப்பாக ஆர்எஸ்எஸ் அமைப்பு தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் ஆகும் நிலையில், அதைப் பாராட்டிப் பேசினார். ஆர்எஸ்எஸ் அமைப்பு சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்களித்ததாகவும் பேசியிருந்தார்.

கார்கே தாக்கு
பிரதமர் மோடியின் இந்தப் பேச்சை எதிர்க்கட்சிகள் அப்போதே விமர்சித்தன. இதற்கிடையே காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் இப்போது இதை விமர்சித்துள்ளார். பீகார் மாநிலம் சசாரம் நகரில் நடைபெற்ற வாக்காளர் அதிகார யாத்திரையில் பேசிய கார்கே, மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார். நாட்டின் சுதந்திரத்திற்கு ஆர்எஸ்எஸ் அமைப்பு எதிராகவே இருந்ததாகவும் மல்லிகார்ஜுன கார்கே கூறினார். அவர் மேலும் பேசுகையில், "சுதந்திர போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு எந்தப் பங்கும் இல்லை. ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாகவே அவர்கள் செயல்பட்டனர்" என்று கூறினார்.
ஆனால், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு கிட்டத்தட்ட 100 ஆண்டுகளாகச் சுயநலமில்லாமல் நாட்டுக்காக உழைத்து வருவதாகவும், சுதந்திரத்திற்குப் பங்களித்ததாகவும் பிரதமர் மோடி பேசியிருக்கிறார். இதை கேட்டு நமது சுதந்திரப் போராட்ட வீரர்கள் வருந்துகிறார்கள்.. சுதந்திரப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு என்ன பங்கு வகித்தது என்பதை மோடி விளக்க வேண்டும். அவர்கள் சுதந்திரத்திற்கு எதிராகவும், மகாத்மா காந்திக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் எதிராகவும் செயல்பட்டார்கள்.
ஆங்கிலேயர்களுக்கு விசுவாசமாக இருந்தனர்
அக்காலத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் ஆங்கிலேயர்களுக்கு விசுவாசமாக நடந்து கொண்டனர். கைதில் இருந்து தப்ப, கருணை காட்டும்படி ஆங்கிலேயர்களிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால், அவர்களைச் சுதந்திரப் போராட்ட வீரர் என்கிறார்.. மோடி அந்தளவுக்கு ஆபத்தான மனிதர். வாக்காளர்கள் தங்கள் உரிமையைப் பாதுகாக்க அவரை ஆட்சிப் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும்.
வாக்குரிமை தரக்கூட எதிர்ப்பு
நாடு சுதந்திரம் அடையும் போது அனைவருக்கும் வாக்குரிமை அளிக்க முடிவு செய்யப்பட்டது. இதை ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் ஆதரவாளர்கள் கடுமையாக எதிர்த்தனர். குறிப்பாகப் பெண்களுக்கு வாக்குரிமை உரிமை அளிப்பதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பெண்களுக்கு அதிகாரம் அளித்தால் அவர்கள் நேருவை தோற்கடிப்பார்கள் என்றெல்லாம் ஆர்.எஸ்.எஸ் சொன்னது. ஆனால் நேரு, பி.ஆர்.அம்பேத்கர் போன்றோருடன் இணைந்து முற்போக்கான நிலைப்பாட்டை எடுத்தார்.
பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட்டது. தலித் தலைவர் பாபு ஜக்ஜீவன் ராம் பலமுறை சசாரம் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஜக்ஜீவன் ராமுக்குப் பிறகு, அவரது மகள் மீரா குமார் மக்களவையின் முதல் பெண் சபாநாயகர் ஆனார். பீகார் மக்கள் இதை மனதில் கொள்ள வேண்டும்" என்றார்.
வாக்கு திருட்டு
வாக்கு திருட்டு தொடர்பாக நடந்த இந்த நிகழ்ச்சியில் மோடி மீதும் கார்கே சில காட்டமான விமர்சனங்களை முன்வைத்தார். தேர்தல்களில் வாக்குகளைத் திருடி பாஜக வெற்றி பெறுவதாகவும், ஆட்சிக்கு வந்த பிறகு இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளையும், விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையையும் திருடி வருவதாகவும் கார்கே குற்றம் சாட்டினார். அரசு பள்ளி மற்றும் கல்லூரி பாடத்திட்டங்களை மாற்றுவதில் மட்டுமே பாஜக ஆர்வம் காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் பேசுகையில், "எதிர்க்கட்சிகளை மத்திய அரசு பல வழிகளில் தொந்தரவு செய்கிறது. மத்திய அரசு நியமித்த ஆளுநர்கள் அனைவரும் மாநில நலன்களுக்கு எதிராகச் செயல்படுகின்றனர். தேர்தல் ஆணையமும் அவர்களின் ஏஜெண்டாக மாறிவிட்டது. சிறப்புத் தீவிர திருத்தம் என்ற பெயரில் 65 லட்சம் பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. அவர்களில் பெரும்பாலானோர் தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், ஏழை புலம்பெயர் தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் சிறுபான்மையினர் ஆவர்" என்று கார்கே குற்றம் சாட்டினார்.












Click it and Unblock the Notifications