அதானி விவகாரம்.. "இந்த" 5 கேள்விகளுக்கு பதில் அளியுங்கள்.. பிரதமருக்கு காங்கிரஸ் எம்பி கடிதம்
அதானி விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு எம்பி மாணிக்கம் தாகூர் கடிதம் எழுதியுள்ளார்.
டெல்லி: கவுதம் அதானியுடன் பிரதமர் நரேந்திர மோடி எத்தனை முறை வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார் என்பதை பிரதமர் மோடி அறிவிக்க வேண்டும் என மாணிக்கம் தாகூர் எம்பி கடிதம் மூலம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் அண்மையில் ஆய்வறிக்கையை வெளியிட்டது. அதில் அதானி குழுமம் பங்குச் சந்தையில் பல்வேறு முறைகேடுகளைச் செய்து ரூ 17.80 லட்சம் கோடிக்கு மோசடி செய்துள்ளதாக குற்றம்சாட்டியது.
பங்குச் சந்தையிலும் அதானி நிறுவனம் மோசடி செய்து போலி நிறுவனங்கள் மூலம் அதானி நிறுவனம் பணத்தை முறைகேடாக சம்பாதித்துள்ளது. இந்த போலி நிறுவனங்கள் தொடர்ந்து வரி ஏய்ப்பிலும் பண மோசடியிலும் ஈடுபட்டுள்ளனர் என்பன உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை குறிப்பிடப்பட்டுள்ளன.

அம்பானி அதானி
அதானி, அம்பானியின் பெருநிறுவனங்களின் நலன்களில் பாஜக அரசு செயல்படுவதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. அது போல் அவர்களுக்காக பல்வேறு சலுகைகளையும் வாரி வழங்குவதாகவும் கூறப்படுகிறது. இதனால் அதானி குழுமம் தொடர்பாக ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை நாடாளுமன்ற கூட்டத் தொடரிலும் எதிரொலித்தது.

அதானி விவகாரம்
இந்த நிலையில் அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் விவாதிக்க வேண்டும் என கூட்டத் தொடர் தொடங்கிய நாள் முதல் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. ஆனாலும் அவையில் பிரதமர் இந்த விவகாரம் குறித்து எதையும் விவாதிக்கவில்லை, அந்த வகையில் அதானி குறித்து 5 கேள்விகளை கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி எழுப்பியிருந்தார்.

பிரதமர் நரேந்திர மோடி
ஆனால் அதில் ஒரு கேள்விக் கூட பிரதமர் நரேந்திர மோடி பதில் அளிக்கவில்லை. அது போல் திமுக, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் கேள்வி எழுப்பின.ஆனால் ஒரு கேள்விக்கு கூட பிரதமர் நரேந்திர மோடி பதில் அளிக்கவில்லை. இந்த நிலையில் ராகுலின் 5 கேள்விகளை கேட்டு பிரதமர் மோடிக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் வழிகாட்டுதல் குழு உறுப்பினரும் (கோவா பொறுப்பு), விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினருமான மாணிக்க தாகூர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

5 கேள்விகள்
அந்த கடிதத்தில் மாணிக்கம் தாகூர் கூறியிருப்பதாவது: 1. அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானியுடன் பிரதமர் நரேந்திர மோடி எத்தனை முறை வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார்?
2. கடந்த 8 ஆண்டு கால பாஜக ஆட்சியில் பிரதமர் வெளிநாடுகளுக்கு சென்ற பிறகு அவரை எத்தனை முறை அதானி சந்தித்துள்ளார்?
3. பிரதமர் ஒரு நாட்டிற்கு சென்ற பிறகு உடனே அதே நாட்டிற்கு அதானியும் சென்றதற்கான விவரங்கள் என்ன?
4. பிரதமரின் வெளிநாட்டு பயணங்களுக்கு பிறகு அதானி நிறுவனம் மேற்கொண்ட ஒப்பந்தங்களின் விவரங்கள் என்ன?
5. கடந்த 20 ஆண்டுகளில் அதானியும் அவரது குழுமத்தினரும் பாஜகவுக்கு அளித்த நிதி எவ்வளவு?
மேற்கண்ட இந்த 5 கேள்விகளை எழுப்பி பிரதமர் நரேந்திர மோடிக்கு மாணிக்கம் தாகூர் எம்பி கடிதம் எழுதியுள்ளார். இந்த கேள்விகளுக்கு விடைகளை பிரதமர் விளக்கினால் இந்த நாடும் நாட்டு மக்களும் அறிந்து கொள்வார்கள் என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications