தேசியக் கொடி விற்பனையில் பெரும் சரிவா? - காரணம் மத்திய அரசா? என்ன நடந்தது? பரபர பின்னணி
டெல்லி: மத்திய அரசின் நடவடிக்கையால் கதர் துணியால் நெய்யப்பட்ட நமது தேசியக் கொடியின் விற்பனை பெருமளவில் சரிந்திருப்பது தெரியவந்துள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், அரசு வாகனங்கள், வெளிநாடுகளின் இந்தியத் தூதரகங்கள் என பல இடங்களில் நமது மூவர்ணக் கொடி பட்டொளி வீசி பறப்பதை பார்த்திருப்போம். இந்தக் கொடிகள் யாவும் இந்தியாவின் ஒரு இடத்தில் இருந்து மட்டுமே தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், கர்நாடகாவின் ஹுப்பளி மாவட்டத்தில் உள்ள பெங்கேரி கிராமத்தில் உள்ள கர்நாடகா காதி மற்றும் கிராமத்யோக சங்கமே (கேகேஜிஎஸ்எஸ்) கதர் துணியில் நமது தேசியக் கொடிகளை தயாரித்து வருகிறது.

இந்நிலையில், வரும் சுதந்திரத் தினத்தன்று அனைவரும் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.இதனால் இந்த முறை தாங்கள் வடிவமைத்த கொடிகள் அதிக அளவில் விற்பனையாகும் என கர்நாடகா காதி சங்கத் தொழிலாளர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருந்தனர்.
ஆனால் மத்திய அரசு அண்மையில் தேசியக் கொடி விதிமுறைகளில் செய்த திருத்தம் அவர்களின் நம்பிக்கையையும், மகிழ்ச்சியையைும் பொய்க்க செய்துவிட்டது. இதற்கு முன்பு வரை கைகளால் நூற்கப்பட்ட கதர் மூவர்ணக் கொடி மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என விதிமுறை இருந்தது. ஆனால், தற்போது மத்திய அரசு செய்துள்ள திருத்தத்தின் படி கதர் மட்டுமல்லாமல் பருத்தி, பாலியஸ்டர், கம்பளி, மரக்கழிவு ஆகியவற்றால் செய்யப்படும் தேசியக் கொடிகளும் பயன்படுத்தலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் கர்நாடகா காதி சங்கத் தொழிலாளர்கள் கதர் துணியால் கையால் நூற்கும் தேசியக் கொடிகளுக்கு தற்போது மவுசு குறைந்துவிட்டது. பாலியஸ்டர்களால் இயந்திரத்தில் செய்யப்படும் தேசியக் கொடிகளை மக்கள் அதிகம் வாங்கி வருகின்றனர். இதன் காரணமாக கர்நாடகா காதி சங்கத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.இங்கு பணியாற்றும் 1,300 தொழிலாளர்களில் 90 சதவீதம் பேர் பெண்கள் ஆவர்.
இதுகுறித்து கர்நாடகா காதி சங்கத்தில் பணியாற்றும் பெண் தொழிலாளர் ஒருவர் கூறுகையில், "பிரதமரின் அறிவிப்பால் இந்த முறை 8 முதல் 10 கோடி ரூபாய் வரை தேசியக் கொடிகள் விற்பனை ஆகும் என நம்பியிருந்தோம். ஆனால் மத்திய அரசு செய்த திருத்தத்தால் இந்த முறை வெறும் 2 கோடி ரூபாய்க்கு மட்டுமே எங்களுக்கு ஆர்டர் கிடைத்துள்ளது. இது எங்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டு சுதந்திர தினம் அன்று கிடைக்கும் வருமானத்தை கொண்டே அந்த ஆண்டை நாங்கள் கழிப்போம். இப்போது என்ன செய்யப் போகிறோம் எனத் தெரியவில்லை" என்றார்.












Click it and Unblock the Notifications