ஆம் ஆத்மியை அசைக்க முடியாது..டெல்லியில் மீண்டும் பாஜக, காங்கிரசுக்கு வாய்ப்பில்லை - கருத்து கணிப்பு
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் மீண்டும் ஆம்ஆத்மி கட்சி தான் அரியணை ஏறும். பாஜக, காங்கிரஸ் கட்சியை மீண்டும் ஓரம்கட்டி 4வது முறையாக ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
டெல்லி சட்டசபை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடந்து முடிந்துள்ளது. வாக்காளர்கள் வரிசையில் நின்று ஓட்டளித்தனர். மாலை 6 மணிக்கு ஓட்டுப்பதிவு நிறைவு பெற்றது.

இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் பிப்ரவரி 8 ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. டெல்லியை பொறுத்தவரை மொத்தம் 70 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 36 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.
டெல்லியில் மும்முனை போட்டி நிலவி வருகிறது. ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே போட்டி உள்ளது. தேர்தல் முடிவடைந்துள்ளதை தொடர்ந்து இன்று மாலை 6.30 மணிக்கு தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன.
Mind Brink கருத்து கணிப்பின்படி மீண்டும் ஆம் ஆத்மி கட்சி தான் ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் 44 முதல் 49 தொகுதிகள் வரை வெல்ல வாய்ப்புள்ளதாக இந்த கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது. அதேவேளையில் பாஜக 21 முதல் 25 தொகுதிகளிலும், காங்கிரஸ் 0 முதல் ஒரு இடத்திலும் வெல்ல வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கருத்து கணிப்பு என்பது ஆம் ஆத்மி கட்சியினருக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.இன்று பல கருத்து கணிப்புகள் பாஜக ஆட்சியை பிடிக்கும் என்று கூறியுள்ள நிலையில் இந்த கருத்து ஆம் ஆத்மி கட்சிக்கு சாதகமாக அமைந்துள்ளது. மாறாக 27 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் செயல்பட்ட பாஜக மற்றும் இழந்த செல்வாக்கை மீட்க நினைத்த காங்கிரஸ் கட்சிக்கு மைண்ட் பிரிங்க் கருத்து கணிப்பு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது.
டெல்லியில் இதற்கு முன்பு தொடர்ந்து 3 முறை ஆம் ஆத்மி ஆட்சியை பிடித்தது. கடந்த 2014, 2015, 2020 ஆகிய சட்டசபை தேர்தல்களில் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இதில் 2014ல் மட்டும் பாஜக - ஆம் ஆத்மி கூட்டணி அமைத்து இருந்தது. ஆனால் அந்த ஆட்சி உடனடியாக கவிழ்ந்தது. அதன்பிறகு 2015, 2020 சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடித்தது. இப்போது மீண்டும் சட்டசபை தேர்தல் நடந்துள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications