லடாக்கில் இந்தியா ஒரு இன்ச் நிலத்தை கூட இழக்கவில்லை.. அடித்துக்கூறும் ராணுவ தளபதி நரவனே!
டெல்லி: லடாக்கில் இந்தியா-சீனா இடையேயான விவகாரத்தில் இந்தியா எந்தப் பகுதியையும் இழக்கவில்லை என்று ராணுவ தலைமை தளபதி எம்.எம்.நரவனே கூறினார்.
ராணுவ அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் லடாக்கின் பாங்காங் ஏரியின் வடக்கு கரையில் இரு நாட்டு வீரர்கள் படைகளை விலக்கிக் கொண்டனர் எனது குறிப்பிடத்தக்கது.

லடாக் எல்லையில் மோதல்
இந்தியா - சீனா ராணுவத்தினர் இடையே லடாக் எல்லையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பிலும் பல வீரர்கள் இறந்தனர். தொடர்ந்து எல்லையில் இருதரப்பு படையினரும் குவிக்கப்பட்டதால் பதற்றம் நிலவியது. எல்லையில் நிலவும் பதற்றத்தை தணிக்க ஒரு நாட்டு ராணுவ அதிகாரிகள் அளவில் தொடர்ந்து பல கட்ட பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

படைகள் விலகல்
இந்த பேச்சுவார்த்தையில் எல்லையில் அமைதி திரும்ப இந்தியாவும், சீனாவும் எல்லையில் இருந்து துருப்புக்களை முன்கூட்டியே விலக்கிக் கொள்ள முடிவு செய்யப்பட்டது. கிழக்கு லடாக்கின் நிலைமையை உறுதிப்படுத்தவும் கட்டுப்படுத்தவும் பயனுள்ள முயற்சிகளை தொடரவும் இரு நாட்டு ராணுவமும் முடிவு செய்தன. அதன்படி பாங்காங் ஏரியின் வடக்கு கரையில் இந்திய, சீன ராணுவம் தங்களது வீரர்களை அங்கிருந்து விலகிக் கொள்ள ஆரம்பித்தன. இரு நாடுகளின் பீரங்கி டாங்கிகளும், போர் வாகனங்களும் அங்கு இருந்து திரும்பி சென்றன.

எதிர்கட்சிகள் குற்றம்சாட்டின
ஆனாலும் இந்த நடவடிக்கையால் திருப்தி அடையாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சீனா இந்தியாவின் நிலத்தை அபகரித்து விட்டதாக குற்றம்சாட்டினார்கள். இது தொடர்பாக பிரதமர் மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் எதிர்கட்சிகளுக்கு விளக்கம் அளித்தனர். இந்த நிலையில் லடாக்கில் இந்தியா ஒரு இன்ச் நிலத்தை கூட இழக்கவில்லை என்று இந்திய ராணுவ தலைமை தளபதி எம்.எம்.நரவனே கூறினார். இது தொடர்பாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்தில் பேட்டியளித்த எம்.எம்.நரவனே கூறியதாவது:-

அங்குலம் நிலத்தை கூட இழக்கவில்லை
லடாக்கில் இந்தியா-சீனா இடையேயான விவகாரத்தில் நாம் எந்தப் பகுதியையும் இழக்கவில்லை. எல்லை மோதல் தொடங்குவதற்கு முன்பு இருந்த நிலைமைதான் தற்போது உள்ளது. ஒரு அங்குலம் நிலப்பகுதியை கூட நாம் விட்டுக் கொடுக்கவில்லை. இரு தரப்பு ராணுவ அதிகாரிகள் இடையே நடந்த பேச்சுவார்த்தையின் பலனாக பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் பங்கோங் த்சோ மற்றும் கைலாஷின் வடக்கு மற்றும் தெற்கு கரைகளில் இருந்து படை விலகல் நடவடிக்கை தொடங்கியது என்று எம்.எம்.நரவனே கூறினார்.












Click it and Unblock the Notifications