"சொகுசு கார்கள் வேண்டாமே.." பிரதமராக இருந்த போது கூட மாருதி 800ல் செல்ல விரும்பியவர் மன்மோகன் சிங்!
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்றிரவு உடல்நலக்குறைவால் காலமானார். அவரது சாதனைகள் குறித்து இப்போது பலரும் நினைவு கூர்ந்து வரும் நிலையில், அவரது எஸ்பிஜி பாதுகாப்பு குழுவில் இடம்பெற்றிருந்த அசிம் அருண், மன்மோகன் சிங்கின் எளிமையான மனப்பான்மை குறித்து சில நெகிழ்ச்சி தகவல்களை பகிர்ந்து கொண்டு இருக்கிறார்.
நமது நாட்டில் 2004ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை பிரதமராக இருந்தவர் மன்மோகன் சிங். அவரது ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பல திட்டங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு பெரியலவில் உதவியிருக்கிறது.

குறிப்பாக ஏழை மற்றும் நடுத்தர வர்கத்தினரின் மேம்பாட்டிற்காக அவர், 100 நாள் வேலைவாய்ப்பு உட்பட பல திட்டங்களை கொண்டு வந்தார். இதற்காக தேசம் என்றும் அவரை நினைவில் கொள்ளும்.
மிடில் கிளாஸ் வர்க்கத்தினருக்காக பல திட்டங்களை கொண்டு வந்த மன்மோகன் சிங், கடைசி வரை மிடில் கிளாஸ் மக்களை போலவே வாழ்ந்தார். பிரதமராக இருந்த போதும் கூட அவர் எப்போதும் ஆடம்பரத்தை விரும்பியதில்லை. எளிமையாகவே இருந்தார். இதற்கிடையே பிரமதராக இருந்த போது மன்மோகன் சிங்கை பாதுகாக்கும் எஸ்பிஜி குழுவில் இடம்பெற்றிருந்த ஒருவர் அவரது எளிமை குறித்து சில நெகிழ்ச்சி தகவல்களை பகிர்ந்து கொண்டு இருக்கிறார்.
அதாவது பிரதமராக இந்த போதும் கூட மன்மோகன் சிங் சொகுசு பிஎம்டபிள்யூ கார்களை விட தனது மாருதி சுஸுகி 800 காரில் பயணிக்கவே ஆர்வம் காட்டியதாக தெரிவித்துள்ளார். இப்போது உத்திரப் பிரதேச சமூக நலத்துறை அமைச்சராக இருக்கும் அசிம் அருண் இந்தத் தகவலைகளை பகிர்ந்துள்ளார். அசிம் அருண் இதற்கு முன்பு பிரதமருக்கு பாதுகாப்பு வழங்கும் எஸ்பிஜி எனப்படும் சிறப்புப் பாதுகாப்புக் குழுவில் பணிபுரிந்தவர். மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது, அவரது பாதுகாப்பு அதிகாரியாக சுமார் மூன்று ஆண்டுகள் பணியாற்றியவர் அருண்..
மன்மோகன் சிங் மறைவை தொடர்ந்து அவரது எளிய வாழ்க்கை முறை மற்றும் சாமானியர்களுடனான தொடர்பு குறித்து அருண் சில முக்கிய கருத்துகளை பகிர்ந்து கொண்டு இருந்தார். எஸ்பிஜி குழுவில் இருந்த போது மன்மோகன் சிங்குடன் தான் பகிர்ந்து கொண்ட தனித்துவமான பிணைப்பு குறித்து அவர் விவரித்தார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், "எஸ்பிஜி பிரிவில் நான் பணியாற்றினேன். பிரதமருடன் எப்போதும் அவரது நிழலைப் போல இருக்க வேண்டியது எனது பொறுப்பு. ஒரே ஒரு காவலர் மட்டுமே பாதுகாப்பிற்கு இருக்க முடியும் என்ற சூழல் வரும் போது.. அவருடன் நான் இருந்துள்ளேன். அவர் பல முறை தனது அதிகாரப்பூர்வ காரில் (BMW) பயணம் செய்வது பிடிக்கவில்லை என்றும் தனது மாருதி கார் தான் பிடித்து இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
பாதுகாப்பு காரணங்களால் உயர் தொழில்நுட்பம் கொண்ட BMW காரின் பாதுகாப்புத் தேவைகளை நான் அவரிடம் விளக்குவேன். ஆனால், அவர் எப்போதும் மாருதி சுஸுகி 800இல் தான் பயணிக்க விரும்புவார். அவர் எப்போதும் நடுத்தர வர்க்கத்தவரை சேர்ந்தவராகவே இருந்துள்ளார்.. சாமானியர்கள் மீது அவர் கொண்டிருந்த அக்கறையை மீண்டும் உறுதிப்படுத்துவது போல் இருந்தது. பிரதமர் பதவியின் மகத்துவத்தை பிஎம்டபிள்யூ கார் அடையாளப்படுத்தினாலும், அவர் இதயத்தில் மாருதி கார் தான் இருந்தது" என்றார்.












Click it and Unblock the Notifications