உலகமே தன்னை போல இருக்கும் என மோடி நினைக்கிறார்.. சத்தியத்திற்கு விலை கிடையாது- ராகுல் காந்தி ஆவேசம்
டெல்லி: சோனியா காந்தி குடும்பத்தினர் நடத்தும் அறக்கட்டளைக்கு எதிராக விசாரணை செய்வதற்கு மத்திய அரசு குழு அமைத்துள்ள நிலையில், இது பழிவாங்கும் நடவடிக்கை என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. பிரதமர் மோடியை, அக்கட்சி மூத்த தலைவர் ராகுல்காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
சோனியா காந்தி குடும்பத்தாரால் நடத்தப்படும் அறக்கட்டளைகள் பண மோசடி தடுப்பு சட்டம் (பி.எம்.எல்.ஏ), வருமான வரி சட்டம், வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டம் போன்ற சட்டங்களை மீறியுள்ளதா என்பதை அறிய நடத்தப்பட உள்ள விசாரணையை ஒருங்கிணைக்க அமலாக்க இயக்குநரகத்தின் சிறப்பு இயக்குநர் தலைமையில் அமைச்சகங்களுக்கு இடையேயான குழுவை அமைத்துள்ளது மத்திய அரசு.
இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராகுல் காந்தி ட்வீட்
இது பற்றி ராகுல் காந்தி இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இந்த உலகமே தன்னை போலத்தான் இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி நினைத்துக் கொண்டு இருக்கிறார். எல்லோருக்கும் ஒரு விலை இருக்கும் அல்லது மிரட்டி பணிய வைக்கலாம் என்று அவர் நினைக்கிறார். சத்தியத்திற்காக போராடுகின்றோருக்கு விலையே கிடையாது. மிரட்டவும் முடியாது என்பதை அவர் ஒருபோதும் புரிந்து கொள்ள மாட்டார். இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கண்டனம்
காங்கிரஸ் கட்சியும் மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து உள்ளது. இது பற்றி, அந்தக் கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் பாதுகாப்பு விவகாரங்களில் சமரசம் செய்துகொண்டது தொடர்பான கேள்விகள் எழுகின்றன. கொரானா வைரஸ் பாதிப்பை சரியாக கையாளாமல் பல மக்களின் உயிரோடு விளையாடியது, பொருளாதார சரிவை தடுக்க முடியாமல் தடுமாறுவது உள்ளிட்டவற்றை காங்கிரஸ் கட்சி அம்பலப்படுத்துவதாக பழிவாங்கும் நடவடிக்கைக்கு மத்திய அரசு தயாராகியுள்ளது.

பழி வாங்கும் நடவடிக்கை
அரசின் திறமையற்ற தன்மையை வெளியே கொண்டு வருவதற்கு எதிராக பழிவாங்கும் நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது. இந்திய எல்லையை சீனா ஆக்கிரமிப்பு செய்தது தொடர்பான கேள்விகளில் இருந்து தப்பிப்பதற்கும், பிரதமரின் நிவாரண நிதிக்கு சீன நிறுவனங்களிடமிருந்து நன்கொடை வந்துள்ளது மற்றும் சீனாவை சேர்ந்த நிறுவனங்களுக்கு அரசு உதவி செய்வது போன்றவற்றில் இருந்து தப்பிப்பதற்காகவும் இதுபோன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது.

பாஜகவுக்கு நன்கொடை
பாஜகவுக்கு வந்த நன்கொடை ரூ. 570.86 கோடி (2015-2016 இல்). ஆனால் ரூ. 2410 கோடி 2018-2019இல் வந்துள்ளதே. இதுபற்றி விசாரிப்பார்களா. பாஜகவும் மோடி அரசும் நமது எல்லைகளை பாதுகாப்பதிலும், கொரோனா உடன் போராடுவதில், பேரழிவுகரமான பொருளாதார மந்தநிலையை சமாளிப்பதிலும் அல்லது கேள்விகளுக்கான பதில்களை தரமுடியாத தோல்விகளை, திசைமாற்றக் கூடாது. இவ்வாறு காங்கிரஸ் கூறியுள்ளது.











Click it and Unblock the Notifications