இஸ்லாமியர்கள், தலித்துகளுக்கு பாஜக மீது கோபமா.. யார் சொன்னது.? முன்னிலை நிலவரங்களை பாருங்க!
டெல்லி: மக்களவை தேர்தல் முன்னிலை நிலவரங்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. தற்போதைய நிலவரப்படி கிட்டத்தட்ட 300-க்கும் மேற்பட்ட இடங்களில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. பாஜக மீது இஸ்லாமிய மற்றும் தலித் மக்கள் கோபம் வெளிப்பட்டுள்ளதா என்பதை பார்க்கலாம்.
வெளி வரும் தேர்தல் முடிவுகளின் படி பாஜக தனித்தே 285 இடங்களிலும் கூட்டணி, கட்சிகளோடு சேர்ந்து சுமார் 340 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது. இந்த முன்னிலை நிலவரங்களில் மிகவும் கூர்ந்து கவனிக்க வேண்டிய அம்சங்களும் உள்ளன.
ஏனெனில் மோடி ஆட்சிக்கு வந்த கடந்த 5 ஆண்டுகளில் அதிகம் பேசப்பட்டது சிறுபான்மையின மக்கள் மீதான தாக்குதல்கள் தான். அதிலும் உத்திரப்பிரதேச மாநிலம் உள்ளிட்ட நாட்டின் சில முக்கிய மாநிலங்களில் பசுக்களை வைத்து நிகழ்த்தப்பட்ட அராஜக சம்பவங்களை மக்கள் மறக்க மாட்டார்கள்.
அதே போல பாரதிய ஜனதாவை ஆர்எஸ்எஸ் நிழல் போல இருந்து செயல்பட வைக்கிறது என்பது பரவலான குற்றச்சாட்டு. இது தவிர கடந்த 2014 தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை வகித்த பாஜகவில் ஒரு முஸ்லிம் எம்பி கூட இல்லை.
அது போல சிறும்பான்மையின மக்களுக்கு தேர்தலில் போட்டியிட போதிய வாய்ப்பு பாரதிய ஜனதாவில் வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் தற்போது வெளிவரும் தேர்தல் முன்னணி நிலவரங்களை பார்த்தால் முடிவுகளோ தலைகீழாக உள்ளது.
இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் சுமார் 49 இடங்களில் பாஜக 23 இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது. ஆனால் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள்13 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளன
அதே போல தலித் வாக்காளர்கள் இம்முறை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக தான் வாக்களிப்பார்கள். அவர்கள் பாரதிய ஜனதா மீது கடுங்கோபத்தில் இருக்கிறார்கள் என்றெல்லாம் கூறப்பட்டது.
ஆனால் இதிலும் நிலைமைய தலைகீழ் தான். இட ஒதுக்கீடு செய்யப்பட்ட தனித்தொகுதிகளில், பாரதிய ஜனதா 47 இடங்களிலும், காங்கிரஸ் 14 இடங்களிலும் மட்டுமே முன்னணியில் உள்ளது. எனவே பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதன் கூட்டணி மீது தலித் மக்கள் கோபமாக இல்லை என்பதையே இது காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்