சிஏஏ, என்ஆர்சி... பிரதமர் மோடி, அமித் ஷாவை சந்திக்கும் முஸ்லிம் மதகுருமார்கள்
டெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) ஆகியவற்றுக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், நாட்டின் முக்கிய இஸ்லாமிய மதகுருமார்கள், இஸ்லாமிய அறிஞர்கள் விரைவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்திக்கவுள்ளனர்.
அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் சார்பில் குடியுரிமைச் சட்டம் மற்றும் என்.ஆர்.சி.க்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை தொழுகையைத் தொடர்ந்து பழைய டெல்லியில் உள்ள ஜமா மஸ்ஜித் பகுதியிலும் பெரிய அளவில் போராட்டங்கள் நடந்தது.

வன்முறை வேண்டாம்
இதையடுத்து அண்மையில், டெல்லி ஜூம்மா மசூதி தலைமை இமாம் உமர் அகமது இலியாசி, போராட்டக்காரர்கள் வன்முறையிலிருந்து விலகுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

அறவழியில் நடத்த
அப்போது பேசிய அவர், அமைதி தொடர வேண்டும் என்று இந்த நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் நான் வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன். ஒரு போராட்டத்தை நடத்துவது நம்முடைய ஜனநாயக உரிமை. நாம் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும், ஆனால் அமைதியான முறையில் தெரிவிக்க வேண்டும்" என்று இலியாசி கூறினார். எனினும் நாடு முழுவதும் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக பல போராட்டங்களால் தொடர்ந்து வன்முறை நீடித்து வருகிறது.

முஸ்லிம் மதகுருக்கள்
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த அனைத்து இமாம் அமைப்பின் தலைவர் டாக்டர் இமாம் உமர் அகமது இலியாசி, "முஸ்லிம் மதகுருமார்கள், கல்வியாளர்கள், அறிஞர்கள், சட்டமியற்றுபவர்கள் மற்றும் மதரசா பாதுகாப்பாளர்கள் அடங்கிய குழு விரைவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கும்" என்றார்.

பிரதிநிதிகள்
குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் என்ஆர்சி குறித்த கவலைகள் குறித்து பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை சந்தித்து இந்த பிரதிநிதிகள் பேசுவார்கள் என்று இலியாசி கூறினார். இந்த சந்திப்பு விரைவில் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications