"யூடர்ன்!" 3 நாட்களில் மூன்று முறை பாதையை மாற்றிய சீன உளவு கப்பல்.. மீண்டும் இலங்கை நோக்கி பயணம்?
டெல்லி: இலங்கைக்கு வர இருந்த சீனாவின் ராணுவ கப்பலின் நடமாட்டம் குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
Recommended Video
சீனாவின் செயல்பாடுகள் உலக நாடுகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தும் வகையில் இருந்து வருகிறது. குறிப்பா, கடந்த சில வாரங்களா அதன் நடவடிக்கை தென்கிழக்கு ஆசிய நாடுகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
முதலில் தைவான் விவகாரத்தில் நான்சி பெலோசி தைவானில் இருந்த போதே, அங்கு ராணுவ பயிற்சி செய்தது. இது அமெரிக்காவுக்கு கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

சீனா
அடுத்து இப்போது இலங்கையிலும் சீனா முக்கை நுழைத்து உள்ளது. அதாவது சீனா ராணுவத்திற்குச் சொந்தமான யுவான் வாங் 5 உளவு கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வர உள்ளதாகத் தகவல் வெளியானது. இதற்கான ஒப்புதலைக் கடந்த ஜூலை மாதமே இலங்கை அரசு அளித்திருந்தது. இந்தச் சூழலில் இந்தியா ஏவுகணை சோதனை குறித்த தரவுகளை உளவு கப்பல் சேகரிக்கக் கூடும் என்பதால் இந்த உளவு கப்பலின் வருகைக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்தியா
இலங்கை இக்கட்டான பொருளாதார சூழலில் சிக்கித் தவித்த போது, இந்தியா மட்டுமே இலங்கைக்கு உதவி இருந்தது. இதன் காரணமாக வேறு வழியின்றி சீனாவின் உளவு கப்பலின் வருகையை காலவரையின்றி தாமதப்படுத்துமாறு இலங்கை கோரிக்கை விடுத்து இருந்தது. இருப்பினும், இதைச் சீனா கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. இன்னும் கூட இலங்கையை அருகிலேயே சீன உளவு கப்பல் சுற்றி வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

நார்வே
இந்நிலையில், நார்வே நாட்டை சேர்ந்த வணிக கடல்சார் புலனாய்வு நிறுவனமான மரிடைம் ஆப்டிமா யுவான் வாங் 5 கப்பலின் நடமாட்டத்தைப் பதிவு செய்துள்ளது. அதில் இலங்கையிடம் இருந்து கோரிக்கை வந்த சமயத்தில் யுவான் வாங் 5 கப்பல் தனது பாதையில் இருந்து திரும்பி சீனாவை நோக்கிப் பயணித்துள்ளது. இருப்பினும், அது சில மைல் தூரம் மட்டுமே யுவான் வாங் 5 கப்பல் அப்படி பயணித்து உள்ளது.

யூடர்ன்
இலங்கை செல்லும் பாதையில் இருந்து கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி அந்தக் கப்பல் திரும்பி உள்ளது. பின்னர் மீண்டும் ஆகஸ்ட் 10ஆம் தேதி சீனா செல்லும் பாதையில் இருந்து மீண்டும் யூடர்ன் போட்டு இலங்கையை நோக்கியே திரும்பி உள்ளது. நேற்று, அதாவது ஆகஸ்ட் 11ஆம் தேதி வரையிலும் கூட சீன கப்பல் இலங்கையின் அருகிலேயே சுற்றி வந்து கொண்டு இருப்பது அதில் தெரிய வந்துள்ளது.

மூன்று முறை
இப்படிக் கடந்த மூன்று நாட்களில் மட்டும் சீன கப்பல் மூன்று முறை அதன் பாதையை மாற்றி உள்ளது. சீனாவின் உளவு கப்பல் வருகை இந்தியாவுக்கு அச்சுறுத்தலாகவே பார்க்கப்படுகிறது. எனவே, சீன கப்பல் நடமாட்டத்தை இந்தியா உன்னிப்பாகவே கவனித்து வருகிறது இது தொடர்பாக வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில், "இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களைப் பாதிக்கும் எந்தவொரு நடவடிக்கையும் அரசு கண்காணித்து, தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்" எனக் கூறி இருந்தார்.

இலங்கை
உள்நாட்டுப் போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இலங்கை அரசு சீனாவிடம் இருந்து ஏகப்பட்ட கடன்களைப் பெற்று இருந்தது. இருப்பினும், அதனை இலங்கையால் திரும்பச் செலுத்த முடியவில்லை. இதனால், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை இலங்கை 99 வருடக் குத்தகைக்குச் சீனாவுக்குக் கொடுத்தது. இந்த துறைமுகத்திற்குச் சீன கப்பல் வருவதாக இருந்தது. சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் துறைமுகம் என்பதால் என்ன நடக்கிறது என்பதைக் கண்காணிப்பதும் கடினம் என அமெரிக்கா தெரிவித்து உள்ளது.












Click it and Unblock the Notifications