மின்னுவதெல்லாம் பொன்னல்ல.. டிவிட்டர் போலிகள் களையெடுப்பு.. பாலோயர்களை இழந்த மோடி, ராகுல்!
டெல்லி: போலி அக்கவுண்டுகள் களையெடுப்பைத் தொடர்ந்து பிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பல்லாயிரக்கணக்கான பாலோயர்களை இழந்துள்ளனராம்.
போலி டிவிட்டர் கணக்குகளை டிவிட்டர் நிறுவனம் அகற்றி வருகிறது. இதனால் பலருக்கு பாலோயர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதில் முக்கியமானவர்கள் பிரதமர் மோடியும், ராகுல் காந்தியும்.
கடந்த நவம்பர் மாதம் முதல் இந்த களையெடுப்பில் இறங்கியுள்ளது டிவிட்டர். இதில் மோடி மட்டும் 1 லட்சம் டுபாக்கூர்களை இழந்துள்ளாராம். ராகுல் காந்திக்கு சேதாரம் சற்று குறைவுதான். அதாவது 9000 பேரை இழந்துள்ளார்.
இவர்கள் தவிர கிரண் ரிஜ்ஜு, பூபேந்தர் யாதவ், அனுராக் தாக்கூர், ஆகியோரும் கணிசமான டுபாக்கூர்களை இழந்துள்ளதாக ஆய்வுத் தகவல் கூறுகிறது.
கடந்த ஆண்டு ஜூலை மாதமும் இதுபோல போலிகளை நீக்கியது டிவிட்டர். இதனால் அப்போது மோடியின் பாலோயர்கள் எண்ணிக்கை 3 லட்சமாக குறைந்தது. ராகுல் காந்தி 17,000 பேரை இழந்தார் என்பது நினைவிருக்கலாம்.
ஆக, மின்னுவதெல்லாம் பொன்னல்ல.. கல்யாணி கவரிங்கும் இடை இடையே கலந்திருக்கும் என்பதை அறிக!