வெட்கக்கேடு.. மாணவிகளின் உள்ளாடையை கழற்ற சொல்வீர்களா? - நீட் சர்ச்சைக்கு மகளிர் ஆணையம் கொதிப்பு
டெல்லி: கேரளாவில் நீட் தேர்வு எழுத சென்ற மாணவிகளின் உள்ளாடைகளை தேர்வு மைய அதிகாரிகள் கழற்ற சொன்னது வெட்கக்கேடானது என கண்டனம் தெரிவித்துள்ள தேசிய மகளிர் ஆணையம், விசாரணை நடத்தப்போவதாக அறிவித்தது.
மருத்துவப் படிப்புகளுக்கு 12 ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்த நிலையில், மத்தியில் ஆட்சிக்கு வந்த பாஜக நீட் என்ற நுழைவுத்தேர்வை அறிமுகம் செய்தது.
இதற்கு தொடக்கத்திலிருந்தே தமிழக அரசியல் கட்சிகளும் மாணவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் இதனால் அனிதா தொடங்கி பல மாணவர்கள் இன்னுயிரை இழந்துள்ளனர்.

நீட் தேர்வு விலக்கு மசோதா
நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்குகோரி சட்டப்பேரவையில் 2 முறை தீர்மானங்களை நிறைவேற்றியும் ஆளுநர் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்தியதால் இந்த ஆண்டும் தமிழ்நாடு மாணவர்களுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு கிடைக்கவில்லை. இதனால் மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராகி வந்தனர்.

நீட் தேர்வு
இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு ஜூலை 17 ஆம் தேதி நடைபெற்றது. பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாடு முழுவதும் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்பட்ட நீட் தேர்வு தொடர்பாக பலவிதமான சர்ச்சைகள் எழுந்துள்ளன. பொதுவாகவே நீட் தேர்வு எழுத செல்லும்போது மாணவிகளின் துப்பட்டா, திருமணமான பெண்களின் தாலி, நகைகள் போன்றவற்றை வெளியில் கழற்றி வைத்துவிட்டு தேர்வு அதிகாரிகள் உள்ளே அனுப்புவது வழக்கம்.

கேரளா சர்ச்சை
இதற்கு ஆண்டுதோறும் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பி வரும் நிலையில், இந்த ஆண்டு நடந்துள்ள சம்பவங்கள் பலரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. பல மாநிலங்களில் ஹிஜாப் அணிந்து சென்ற மாணவிகள் தேர்வறைக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதேபோல் உலோகங்களுக்கு அனுமதி இல்லை என்று கூறி கேரள மாநிலம் கொல்லத்தில் மாணவிகளின் உள்ளாடைகளை தேர்வு மைய அதிகாரிகள் கழற்ற சொன்னதாக மாணவியின் தந்தை காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
Recommended Video

தேசிய மகளிர் ஆணையம்
இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து தேசிய மனித உரிமை ஆணையம் இதுகுறித்த விசாரணை நடத்த கொல்லம் எஸ்பிக்கு உத்தரவிட்டு உள்ளது. இந்த நிலையில் மாணவிகளின் உள்ளாடைகளை கழற்ற சொன்னது வெட்கக்கேடான, மூர்க்கத்தனமான செயல் என்று தேசிய மகளிர் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தேசிய தேர்வு முகமையின் தலைவருக்கும், கேரளா டிஜிபிக்கும் கடிதம் எழுதியுள்ள அந்த அமைப்பு, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளது. புகார் உண்மை என்று உறுதியானால் 3 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என மகளிர் ஆணையம் எச்சரித்துள்ளது.












Click it and Unblock the Notifications