டாய்லெட் முதல் செல்போன் வரை.. கணக்கெடுப்பில் 31 கேள்விகள் கேட்பாங்க.. ஏப்ரல் 1 முதல் ஆரம்பம்
டெல்லி: ஏப்ரல் 1 முதல் நாடு முழுவதும் வீடுதோறும் கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. அப்போது கணக்கெடுக்க வரும் அதிகாரிகள் , டாய்லெட், டிவி, வைத்துள்ள வண்டிகள், செல்போன் எண்கள் உட்பட 31 கேள்விகளை கேட்க உள்ளார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
நாடு முழுவதும் தேசிய மக்கள் தொகை பதிவேடு பணி இந்தாண்டு செப்டம்பரில் இருந்து தொடங்கப்பட உள்ளது. இதில், இந்தியாவில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை கணக்கெடுக்கப்பட உள்ளது.
ஒவ்வொரு 10 ஆண்டுக்கு ஒருமுறை இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடைபெறுவது வழக்கம். கடைசியாக 2010ம் ஆண்டு நடந்து முடிந்து 2011ம் ஆண்டு மக்கள் தொகை வெளியிடப்பட்டது.

செப்டம்பர் வரை
எனவே 2021ம் ஆண்டுக்கான தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிப்பதற்காக வரும் ஏப்ரல் 1ம் தொடங்கி, செப்டம்பர் 30 வரை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்கிறது. இதற்காக வீடுகளை கணக்கெடுக்கும் பணியை மத்திய கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகம் தொடங்க உள்ளது.

கணக்கெடுப்பு ஆணையர்
இது தொடர்பாக பதிவாளர் ஜெனரல் மற்றும் கணக்கெடுப்பு ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வீடுகள் கணக்கெடுப்பின் போது ஒவ்வொரு வீட்டிலும் உள்ள கழிவறை வசதி, டிவி, இணையவசதி, சொந்த வாகனங்கள், குடிநீர் ஆதாரங்கள், குடும்ப தலைவரின் போன் எண் உட்பட 31 கேள்விகளை அதிகாரிகள் கேட்டு பதிவு செய்ய வேண்டும். கணக்கெடுப்புக்காக மட்டுமே போன் எண் கேட்கப்படுகிறது. வேறு எந்த காரணத்துக்காகவும் அல்ல.

வீட்டில் வசிப்பவர்கள்
லேண்ட்லைன் போன், செல்போன், ஸ்மார்ட் போன், சைக்கிள், ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள், கார், டிவி, லேப்டாப் அல்லது கம்ப்யூட்டர் போன்றவை உள்ளதா என்ற தகவல்களும் கேட்கப்பட உள்ளது.. கட்டிட எண், வீட்டில் போடப்பட்டுள்ள தரை, வீட்டின் நிலவரம், வீட்டில் வசிப்பவர்களின் எண்ணிக்கை, குடும்ப தலைவரின் பெயர் மற்றும் பாலினம் ஆகியவையும் கேட்கப்பட உள்ளது.

கழிவறை வசதி
குடும்ப தலைவர் தாழ்த்தப்பட்டவரா அல்லது பழங்குடியினத்தை சேர்ந்தவரா அல்லது இதர பிரிவை சேர்ந்தவரா என்பதையும் அதிகாரிகள் கேட்க உள்ளார்கள். வீட்டில் உள்ள மின் வசதி, கழிவறை வசதி, கழிவு நீர் வெளியேற்றும் வசதி, குளியலறை வசதி, சமையலறையில் காஸ் இணைப்பு வசதி, சமையலுக்கு பயன்படுத்தப்படும் முக்கிய எரிபொருள் முதலிய தகவல்களும் கேட்கப்பட உள்ளது. இந்த கணக்கெடுப்பு மொபைல் போன் ஆப் மூலம் நடத்தப்பட உள்ளது. வழக்கமான பேனா, பேப்பர் பயன்படுத்தப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications