நேபாள வன்முறை பின்னணியில் அயல்நாட்டு சதி.. இந்தியா உஷாராக இருக்க வேண்டும்.. நிபுணர்கள் கருத்து
காத்மாண்ட்: நேபாளத்தில் இளைஞர்கள் நடத்திய போராட்டம் வன்முறையானது. இதையடுத்து அந்த நாட்டின் அமைச்சர்கள், பிரதமர் கேபி சர்மா ஒலி உள்ளிட்டவர்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். ஆனால் இன்னும் அங்கு வன்முறை தணியவில்லை. இந்நிலையில் தான் நேபாள விவகாரத்தில் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். அமெரிக்காவின் சதி உள்ளது என்று எக்ஸ்பர்ட்டுகள் இந்தியாவுக்கு முக்கிய வார்னிங்கை கொடுத்துள்ளனர்.
அண்டை நாடாக நேபாளத்தில் சில நாட்களுக்கு முன்பு பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ், யூடியூப் உள்பட 26 சமூக வலைதளங்களுக்கு பிரதமர் கேபி சர்மா ஒலி தடை விதித்தார். இதற்கு இளைஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தலைநகர் காத்மாண்டுவில் நேற்று முன்தினம் பெரிய அளவில் போராட்டம் நடந்தது.

இது வன்முறையான நிலையில் சமூக வலைதளங்கள் மீதான தடை நீக்கப்பட்டது. இருப்பினும் போராட்டக்காரர்கள் விடவில்லை. நாட்டில் ஊழல் அரசு நடக்கிறது. இதனால் பிரதமர் கேபி சர்மா ஒலி பதவி விலக வேண்டும் என்று தொடர்ந்து போராடினர். வன்முறை அதிகரித்தது. இதனால் அரசியல் கட்சி தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அரசியல் தலைவர்களின் வீடு, நாடாளுமன்றம், உச்சநீதிமன்றம் தீவைத்து எரிக்கப்பட்டது.
பிரதமர் ராஜினாமா - ஓயாத வன்முறை
இதையடுத்து வேறு வழியின்றி அடுத்தடுத்து அமைச்சர்களும், பிரதமர் கேபி சர்மா ஒலியும் தங்களின் பதவியை ராஜினாமா செய்தனர். இன்னும் நேபாளத்தில் பதற்றம் தணியவில்லை. வன்முறை தொடர்ந்து வருகிறது.
இதற்கிடையே தான் பல நிபுணர்கள் நம் நாட்டுக்கு எச்சரிக்கையை கொடுத்துள்ளனர். நேபாளத்தில் இன்னும் வன்முறை தணியவில்லை. இதனால் அந்த விவகாரத்தில் தலையீடு செய்ய வேண்டாம். தலையீடு செய்ய இன்னும் காத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
வேணு ராஜமணி கருத்து
இதுதொடர்பாக முன்னாள் டிப்ளமோட் வேணு ராஜமணி கூறுகையில், ‛‛இலங்கை, வங்கதேசத்தில் நடந்தது போல் இப்போது நேபாளத்திலும் நடந்துள்ளது. நம் அண்டை நாடுகளில் இப்படி தொடர்ச்சியான சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதுபோன்ற சம்பவங்களில் அந்தந்த நாடுகளில் ஆட்சி கவிழ்ப்பு நடப்பதோடு, தலைவர்கள் தப்பியோடுகின்றனர். இது நல்ல விஷயத்துக்கான அறிகுறியாக தெரியவில்லை.
இதனால் பிரச்சனை சரியாகும் வரை நாம் காத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஏனென்றால் நேபாளத்தில் தற்போது நிலைமை சரியில்லை. நமக்கும், நேபாளத்துக்குமான உறவு, நமக்கான நலன்கள் மற்றும் அதனால் ஏற்படும் தாக்கங்கள் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு நாம் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும்'' என்றார்.
அசோக் காந்தா கருத்து
அதேபோல் இன்னொரு டிப்ளமோட் (Diplomat) அசோக் காந்தா கூறுகையில், ‛‛நேபாளத்தில் நடந்த பிரச்சனைக்கும், இந்தியாவுக்கும் எந்த பங்கும் இல்லை. இந்த நேரத்தில் நம் நாடு தலையீடு செய்யும்போது அது எதிர்விளைவுகளை ஏற்படுத்தும். எனவே நேபாளத்தின் நிலைமையை முதலில் மதிப்பீடு செய்ய வேண்டும்'' என்றார்.
பின்னணியில் அமெரிக்கா இருக்குதாம்
அதேபோல் எக்ஸ்பர்ட் எஸ்எல் கந்தன் என்பவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், ‛‛நேபாளத்தின் போராட்டத்தின் பின்னணியில் 100 சதவீதம் அமெரிக்கா உள்ளது. உலகம் முழுவதும் இளைஞர்கள் மூளைச்சலவை செய்யப்படுகின்றனர். இவர்கள் நாடாளுமன்றம் மற்றும் அரசியல்வாதிகளின் வீடுகளை எரிக்கிறார்கள். தலைவர்களை நாட்டை விட்டு ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது.
வங்கதேசம், பாகிஸ்தானில் இப்படியான நிலை வந்த பிறகு அமெரிக்காவின் கைப்பாவை தலைவர்கள் பதவியேற்றனர். நேபாளத்திலும் அதுபோன்ற ஒருவர் அமெரிக்காவின் கைப்பாவையாக பதவியேற்பார்'' என்று கூறியுள்ளார். இதன்மூலம் அவர் கூறியது என்னவென்றால் நேபாள பிரதமர் கேபி சர்மா ஒலி, அதிகளவில் சீனாவுடன் நெருக்கம் காட்டினார். இது அமெரிக்காவுக்கு பிடிக்கவில்லை. இதனால் நேபாளத்தின் ஆட்சி கவிழ்ப்பின் பின்னணியில் அமெரிக்கா இருக்கிறது என அவர் கூறியுள்ளார்.
வெளியுறவுத்துறை முக்கிய அட்வைஸ்
முன்னதாக நம் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் முக்கிய அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், ‛‛அண்டை நாடாகவும், நெருங்கிய நட்பு நாடாகவும் நேபாளம் உள்ளது. இங்குள்ள மக்கள் அனைவரும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். அமைதியான வழிமுறைகள் மற்றும் உரையாடல் மூலமாக பிரச்சனைகளை தீர்த்து கொள்வீர்கள் என்று நம்புகிறோம்'' என தெரிவித்து இருந்தது. ஆனால் நேபாளத்தில் வன்முறை வெடித்து பிரச்சனை எல்லை தாண்டி சென்றுவிட்டது.
இந்த பிரச்சனையின் காரணமாக நம் நாட்டில் இருந்து யாரும் நேபாளுக்கு செல்ல வேண்டாம் என்று மத்திய அரசு அறிவுரை வழங்கி உள்ளது. அதேபோல் நேபாளத்தில் உள்ள இந்தியர்கள் தாங்கள் வசிக்கும் இடங்களில் பத்திரமாக இருக்க வேண்டும். வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகத்தின் அறிவுரைகளை பின்பற்ற வேண்டும். ஏதேனும் உதவிகள் வேண்டும் என்றால் +977 980 860 2881, +977 981 032 6134 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம். வாட்ஸ்அப் கால் பண்ணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications