பாடம் கற்ற பாஜக.. ஓபிசி அரசியலை கையில் எடுக்கும் மோடி.. உ.பி மாநிலத்தின் தலைவர் அதிரடி மாற்றம்!
லக்னோ: பங்கஜ் சௌத்ரி உத்தரப் பிரதேச பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் முன்னிலையில் இந்த அறிவிப்பை வெளியிட்டார். அரசியல் முக்கியத்துவம் உத்தர பிரதேச மாநிலத்தில் 2027 இல் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ஓராண்டுக்கு சற்று முன்னதாகவே இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.

துணை முதல்வர்கள் கேசவ் பிரசாத் மவுரியா மற்றும் பிரஜேஷ் பதக் ஆகியோர் உட்பட பல தலைவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். உ.பி பாஜக தலைவர் பதவிக்கான தேர்தலில் சனிக்கிழமை தனது வேட்புமனுவை சௌத்ரி தாக்கல் செய்தார், தேர்தலில் அவர் மட்டுமே போட்டியிட்டார். முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மாநிலத் தேர்தல் அதிகாரியுமான மகேந்திர நாத் பாண்டே மற்றும் மத்தியத் தேர்தல் பார்வையாளர் வினோத் தவாடே ஆகியோரிடம் அவர் தனது மனுக்களைச் சமர்ப்பித்தார்.
பாஜக உத்தர பிரதேச தலைவர்
சௌத்ரி தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தபோது, ஜல் சக்தி துறை அமைச்சர் சுவந்திர தேவ் சிங் உள்ளிட்டப் பல தலைவர்கள் உடனிருந்தனர். இதையடுத்து அவர் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இந்த அறிவிப்பு குறித்துப் பேசிய அமைச்சர் டேனிஷ் ஆசாத் அன்சாரி, இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் என்று கூறினார். அவர் மேலும், பிரதமர் மோடி மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் மாநிலத்தை வளர்த்தெடுக்கும் மற்றும் முன்னேற்றும் தொலைநோக்கு பார்வை, எங்கள் புதிய கட்சித் தலைவரின் ஆதரவு மற்றும் முயற்சியால் நிஜமாகி வருகிறது. 2027 இல் மீண்டும் மாநிலத்தில் முழுப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம்"என்று தெரிவித்தார்.
யார் இந்த பங்கஜ் சௌத்ரி?
உத்தரப் பிரதேச அரசியலில் ஒரு வலுவான பெயர் கொண்ட பங்கஜ் சௌத்ரி, மகாராஜ்கஞ்ச் தொகுதியில் இருந்து ஏழு முறை மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் (ஓபிசி) பிரிவின் கீழ் வரும் குர்மி சமூகத்தைச் சேர்ந்தவர். பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருக்கு நெருங்கிய நம்பிக்கைக்குரியவராக கருதப்படுகிறார்.
அவரது பெயரை முதல்வர் யோகி ஆதித்யநாத் முன்மொழிய, துணை முதல்வர்கள் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, சுரேஷ் கன்னா, சுவந்திர தேவ் சிங் உள்ளிட்டப் பல மூத்த தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
பங்கஜ் சௌத்ரியின் இந்த புதிய பதவி பாஜகவிற்கு ஏன் முக்கியமானது?
உத்தர பிரதேசம் மாநிலத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல்களும், அதைத் தொடர்ந்து 2027 சட்டப்பேரவைத் தேர்தல்களும் வரவுள்ளதால், புதிய தலைவரின் பின்னணி அந்த மாநில அரசுக்கு முக்கியமானது என்று பல அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
ஏழு முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சௌத்ரி, மகாராஜ்கஞ்ச் பகுதியில் வலுவான செல்வாக்கு கொண்டவர். அவர் மாநிலத்தின் ஓபிசி சமூகத்தின் முக்கிய முகமாக அறியப்படுகிறார். இது பாஜகவின் முக்கியமான வாக்கு வங்கியாகும். 2024 மக்களவைத் தேர்தலில், குறிப்பிடத்தக்க அளவில் குர்மி சமூக வாக்குகள் சமாஜ்வாடி கட்சிக்குச் சென்றன. அவற்றை மீண்டும் தங்கள் பக்கம் ஈர்க்க பாஜக திட்டமிட்டுள்ளது.
கடந்த லோக்சபா தேர்தலில் பாஜக மிக மோசமாக உத்தர பிரதேசத்தில் செயல்பட்டது. முக்கியமாக பிற்படுத்தப்பட்ட ஜாதியினர் பெரிதாக பாஜகவிற்கு வாக்களிக்கவில்லை. இந்த நிலையில்தான் பங்கஜ் சௌத்ரியின் வருகை பாஜகவிற்கு பெரிய அளிக்கும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications