பூகம்பமே வந்தாலும் அசராது.. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் சிறப்புகள்.. அறிய வேண்டிய டாப் பாயிண்ட்ஸ்!
டெல்லி: ரூ.1,250 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். புதிய நாடாளுமன்றம் கட்டிடத்தின் சிறப்புகள் குறித்து இங்கே பார்க்கலாம்.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் தற்போதுள்ள பாராளுமன்ற கட்டிடம் சுமார் 97 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ஆங்கிலேய ஆட்சி காலத்தில் அதாவது கடந்த 1927 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த பாராளுமன்றம் மிகவும் பழமையானதோடு தற்போதைய தேவைகளுக்கு தகுந்தபடி இல்லை. இதனால், புதிய தொழில் நுட்ப வசதிகளுக்கேற்ப நாடாளுமன்ற நிகழ்வுகளை நடத்த புதிய கட்டடம் கட்ட வேண்டும் என மத்திய அரசு திட்டமிட்டது.

இதன்படி, புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கு கடந்த 2020 ஆம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 970 கோடி ரூபாய் செலவில் நான்கு மாடி கொண்ட முக்கோண வடிவிலான கட்டடமாக சென்ட்ரல் விஸ்டா' திட்டத்தின் கீழ் நாடாளுமன்றம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நாடாளுமன்றத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.
குடியரசுத்தலைவர் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால், திறப்பு விழாவை புறக்கணிப்பதாக எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன. பிரதமர் மோடி திறந்து வைப்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. அதை உச்ச நீதிமன்றம் நிராகரித்த நிலையில், திட்டமிட்டபடி இன்று பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் உள்ள சிறப்புகள்:
* புதிய நாடாளுமன்ற கட்டிடம் 64,500 சதுர மீட்டருக்கும் அதிகமான பரப்பளவில் கட்டப்பட்டு இருக்கிறது.
* 150 ஆண்டுகள் வரை நிலைத்து நிற்கும் வகையில் கட்டப்பட்டுள்ள இந்த புதிய பாராளுமன்றம், பயங்கர பூகம்பம் வந்தாலும் தாங்கி நிற்கும். அந்த அளவுக்கு வலுவாக கட்டப்பட்டு இருக்கிறது.
* 39.6 மீட்டர் உயரத்தில் 4 மாடிகளுடன்கூடிய இந்த கட்டிடத்தில் 888 இருக்கைகளை கொண்ட மக்களவை அரங்கு, 384 இருக்கைகளை கொண்ட மாநிலங்களவை அரங்குகள் உள்ளன.
* நாடாளுமன்ற கூட்டுக்கூட்டம் நடைபெறும் போது மக்களவையில் 1,742 உறுப்பினர்கள் வரை அமரும் வகையில் வசதிகள் உள்ளன.
*அமைச்சர்களுக்கான அறைகள், நாடாளுமன்ற குழுக்களின் அலுவலக அறைகள், நூலகம் ஆகியவையும் இருக்கின்றன.
* மக்கள் தொகை அதிகரிப்பதால் தொகுதி எண்ணிக்கை அதிகரிப்பது பற்றியும் மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இதனால், அதற்கேற்றவாறு இரு அவைகளிலும் கூடுதல் இருக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
* நாடாளுமன்ற உறுப்பினர்கள் வசதியாக இருக்கும் வகையில் இரு அவைகளிலும் அதிக இடைவெளியுடன் இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
* லோக்சபை இந்திய தேசிய பறவையான மயில் போன்றும், ராஜ்யசபை தேசிய மலரான தாமரை போன்றும் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.
* நாடாளுமன்ற கட்டிடத்தின் நடுவில் 2 ஆயிரம் ச.மீ. பரப்பளவுக்கு திறந்த வெளி பகுதியும் உள்ளது.
* சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் பசுமை கட்டிடமாக கட்டப்பட்டு உள்ளது. இதனால், 30 % மின்சாரத்தை சேமிக்க முடியும்.
* நவீன முறையை கையாண்டு பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதாவது, தீ அணைப்பு வசதிகள், சிறந்த கண்காணிப்பு கேமரா உள்ளிட்டவைகள் உள்ளன.
* புதிய நாடாளுமன்ற கட்டிடம் பயன்பாட்டுக்கு வந்த போதிலும் பழைய கட்டிடமும் தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வரும்.
* கடந்த ஆண்டு நவம்பர் மாதமே இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால், அந்த காலத்திற்குள் முடிக்க முடியவில்லை.
* புதிய நாடாளுமன்றத்தை கட்டி முடிக்க 23,04,095 - வேலை நாட்கள் தேவைப்பட்டதாம். 26,045 மெட்ரிக் டன் ஸ்டீல்கள், 63,807 மெட்ரிக் டன் சிமெண்ட்கள் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications