சினிமாவில்தான் வில்லன்.. நிஜத்தில் சூப்பர் ஹீரோவான சோனு சூட்.. மறக்க முடியாத 2020
டெல்லி: கொரோனா காலத்தில் சூப்பர் ஹீரோ போல் பெரும்பாலான மக்களுக்கு உதவி செய்த சோனு சூட்டை யாராலும் மறக்க முடியாது.
சோனு சூட் இந்தி நடிகர், இவர் தமிழ் திரையுலகில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கொரோனா காலத்தில் ஊரடங்கு உத்தரவால் பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது.
தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்குமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால் இவர்களது கோரிக்கை யாருக்கு கேட்டதோ இல்லையோ நம் சோனு சூட்டிற்கு கேட்டுவிட்டது.

மும்பை
உடனே தனியாக ஒரு பேருந்தை வைத்து மும்பையில் சிக்கியவர்களை தங்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தார். அப்படி சோனு சூட் அனுப்பி வைத்தவர்களில் தமிழர்களும் அடங்குவர். கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து சீசனுக்காக இட்லி வியாபாரம் செய்ய தமிழ் குடும்பத்தினர் மும்பை சென்றிருந்தனர்.

கடைகள் மூடல்
அங்கு கொரோனா ஊரடங்கால் கடைகள் மூடப்பட்டதால் இவர்கள் கையில் இருந்த பணத்தை வைத்து கொஞ்சம் காலம் செலவு செய்து கொண்டனர் காசு தீர்ந்தவுடன் அவர்கள் உணவுக்கே வழியில்லாத நிலை ஏற்பட்டது. இவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்த புண்ணியம் சோனு சூட்டையே சாரும்.

அத்தியாவசிய பொருட்கள்
பெரும்பாலான மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை சோனு சூட் அளித்தார். கொரோனாவால் மாடு வாங்க முடியாத நிலையில் இருந்த ஆந்திர விவசாயி தனது மகள்களை மாடாக பூட்டி ஏர் உழுத செய்தியை படித்த சோனு சூட் அவருக்கு உடனடியாக ஒரு டிராக்டரை பரிசாக வழங்கினார்.

சோனு சூட்
அது போல் ஆன்லைன் வகுப்பில் செல்போன் இல்லாத காரணத்தால் மாணவர்கள் அந்த வகுப்புகளை கவனிக்க முடியவில்லை என்பதை கேள்விப்பட்டார் சோனு சூட். உடனடியாக நவீன செல்போன்களை வாங்கிக் கொடுத்தார். மேலும் தனது பங்களாவை விற்றும் சில உதவிகளை செய்துள்ளார். சினிமாவில் வில்லனாக நடித்தாலும் தேவை இருந்த மக்களின் கண்களுக்கு ஹீரோவாக தெரிந்த சோனு சூட்டை மறக்க முடியுமா?












Click it and Unblock the Notifications