நிர்பயா வழக்கு.. குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினார் குற்றவாளி முகேஷ் சிங்!
நிர்பயா வழக்கில் குற்றவாளி முகேஷ் சிங் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினார்.
டெல்லி: நிர்பயா வழக்கில் குற்றவாளி முகேஷ் சிங் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினார். தூக்கு தண்டனை ரத்து செய்ய கோரி, முகேஷ் சிங் கருணை மனு அனுப்பினார்.
டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கு மிக முக்கியமான கட்டத்தை எட்டி இருக்கிறது. டெல்லியில் பேருந்தில் நிர்பயா கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை நாட்டையே உலுக்கியது. சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிர்பயா, சிகிச்சை பலனின்றி டிசம்பர் 29-ஆம் தேதி உயிரிழந்தார். இதில் குற்றவாளிகள் நால்வரும் தூக்கு கயிறை எதிர்நோக்கி இருக்கிறார்கள். அக்சய் குமார் சிங், வினய் குமார் சர்மா, பவன் குப்தா, முகேஷ் சிங் ஆகிய 4 குற்றவாளிகளுக்கும் கடந்த 2017-ம் ஆண்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த தூக்கு தண்டனை இந்த மாதம் நிறைவேற்றப்பட உள்ளது. இதில் குற்றவாளிகளுக்கு இருந்த சட்ட வாய்ப்பு எல்லாம் முடிந்துவிட்டது. இதில் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று இரண்டு முறை குற்றவாளிகள் மனு அளித்தனர்.
இந்த மனு நீதிபதிகள் என்.வி.ரமணா, அருண் மிஸ்ரா, நாரிமன், பானுமதி, அசோக் பூஷண் அடங்கிய அமர்வு முன்பு, விசாரணைக்கு வந்தது. இன்று இந்த வழக்கில் குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது. குற்றவாளிகளை தூக்கில் போடுவதற்கு தடை விதிக்க முடியாது.
சீராய்வு மனுவை ஏற்றுக்கொள்ள முடியாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதனால் குற்றவாளிகள் 4 பேரையும் வருகிற 22-ந்தேதி காலை 7 மணிக்கு தூக்கில் போட சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதில் சட்ட வழிகள் எல்லாம் முடிந்துள்ளதால், தற்போது கருணை மனு அளிக்க குற்றவாளிகள் முடிவு செய்துள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக நிர்பயா வழக்கில் குற்றவாளி முகேஷ் சிங் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு கருணை மனு அனுப்பி உள்ளார். தூக்கு தண்டனை ரத்து செய்ய கோரி, முகேஷ் சிங் கருணை மனு அனுப்பினார். இவரை போலவே வழக்கில் மீதம் உள்ள மூவரும் விரைவில் கருணை மனு தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது.
கருணை மனு பொதுவாக நிலுவையில் இருக்கும் போது தூக்கு தண்டனை நிறைவேற்றப்படாது. ஆனால் இவர்கள் வழக்கில் அந்த நடைமுறை பின்பற்றப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.