ஜிஎஸ்டியால் சுமைகள் குறைந்து உள்ளன.. மாநிலங்களும், மக்களும் ஹேப்பி - சொல்கிறார் நிர்மலா சீதாராமன்
டெல்லி: ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை வந்த பிறகு நாட்டில் வர்த்தகம் மற்றும் தொழில்துறையின் சுமை குறைந்து உள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து உள்ளார்.
2024 மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்ற மக்களவையில் இன்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். நாடாளுமன்ற தேர்தல் நிறைவடைந்து புதிய அரசு அமைந்த பிறகு முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இன்று மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட்டில் பல்வேறு துறை அறிவிப்புகள், நிதி ஒதுக்கீடு குறித்த விபரங்களை வெளியிட்டார்.

அவர் தனது பட்ஜெட் உரையில் ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்து பேசியதாவது, "ஜிஎஸ்டி வரி விதிப்பு வர்த்தகம் மற்றும் தொழில் துறையின் இணக்கச் சுமையைக் குறைத்து உள்ளது. ஜிஎஸ்டி மூலம் கிடைக்கும் வரி வருவாய் 2 மடங்கிற்கும் மேல் அதிகரித்து உள்ளது. இந்த ஆண்டு சராசரி மாதாந்திர மொத்த ஜிஎஸ்டி வசூல் கிட்டத்தட்ட இரட்டிப்பாகி ரூ.1.66 லட்சம் கோடியாக உயர்ந்து இருக்கிறது.
ஜிஎஸ்டி வரி விதிப்பு காரணமாக மாநிலங்களும் பயனடைந்து உள்ளன. மாநிலங்களின் எஸ்ஜிஎஸ்டி வருவாய், ஜிஎஸ்டி வருகைக்குப் பிறகு அவர்களுக்கு விடுவிக்கப்பட்ட இழப்பீடு உட்பட, 1.22 என்ற அளவை அடைந்து இருக்கிறது. ஜிஎஸ்டி காரணமாக பெரும்பாலான பொருட்கள் மற்றும் சேவைகளின் போக்குவரத்து செலவுகள் குறைந்து உள்ளன. விலையும் விலை குறைந்து இருக்கிறது. இதன் காரணமாக நுகர்வோர் பெரும் பயனடைந்து இருக்கிறார்கள்." என்று தெரிவித்தார்.
முன்னதாக அவர் ஆற்றிய உரையில், கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் காரணமாக அடைந்து உள்ள வளர்ச்சி குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என தெரிவித்தார். வருமான வரி விகிதத்தில் எந்த விதமான மாற்றமும் இல்லை என்றும், பழைய நடைமுறையே தொடரும் எனவும் கூறினார். மத்திய அரசால் மாநிலங்களுக்கு வட்டியில்லாக் கடனாக ரூ.1.2 லட்சம் கோடி வழங்கப்படும் என அவர் உறுதியளித்தார்.












Click it and Unblock the Notifications