இந்தியா கூட்டணியில் இருந்து நிதிஷ் குமார் போனது இதற்காகத்தான்.. போட்டு உடைத்த ராகுல் காந்தி
டெல்லி: இந்தியா கூட்டணியை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்த நிதிஷ் குமார், அந்தக் கூட்டணியில் இருந்து வெளியேறி பாஜகவுடன் கைகோர்த்துள்ளார். நிதிஷ் குமார் இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறியது குறித்து முதல் முறையாக ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
லோக் சபா தேர்தல் இன்னும் விரைவில் நடைபெற இருக்கிறது. தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சி அமைக்கும் முனைப்பில் பாஜக தேர்தல் வேலைகளை தீவிரமாக செய்து வருகிறது. இதேபோல் இந்த முறை பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றிவிட வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து இந்தியா கூட்டணி உருவாகியது. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ஆம் ஆத்மி என பல கட்சிகள் ஒன்றிணைந்தது.

இதில், இந்தியா கூட்டணியை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்தவர் பீகார் முதல்வர் நிதிஷ் குமார். நாடு முழுக்க உள்ள எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கினர். இந்த கூட்டணியை உருவாக்கிய முக்கிய நபர்களில் ஒருவராக நிதிஷ் குமார் இருந்தார். ஆனால், திடீர் திருப்பமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு "இந்தியா" கூட்டணியில் இருந்து விலகி மீண்டும் பாஜக உடன் கை கோர்த்தார்.
நிதிஷ் குமார் விலகல்: இது இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தியா கூட்டணியை முன்னின்று ஒருங்கிணைத்தாலும் தனக்கு போதிய முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்று நிதிஷ்குமார் கருதியதாக சொல்லப்பட்டது. குறிப்பாக இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக யாரை நியமிக்கலாம் என்பது குறித்து ஆலோசனையின் போது நிதிஷ்குமார் பெயரைப் பரிசீலனை செய்துள்ளனர்.
இருப்பினும், ஒருங்கிணைப்பாளராக யாரைப் போடலாம் என்பது குறித்து மம்தா பானர்ஜியுடன் ஆலோசிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி கூறியதே நிதிஷ் குமாரை கோபத்தில் தள்ளியுள்ளது. இதுபோன்ற அதிருப்தி காரணமாக இந்தியா கூட்டணியில் இருந்து விலகும் முடிவை நிதிஷ்குமார் எடுத்ததாக சொல்லப்படுகிறது.
யூ - டேர்ன் அடித்து விட்டார்: நிதிஷ்குமார் இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறியது குறித்து கருத்து எதுவும் கூறாமல் இருந்த ராகுல் காந்தி முதல் முறையாக இன்று மவுனம் கலைத்துள்ளார். இது தொடர்பாக ராகுல் காந்தி கூறியதாவது:- நிதிஷ் குமாரை சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று நாங்களும் (காங்கிரஸ்) ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியும் வலியுறுத்தியுனோம்.
ஆனால், பாஜக இதற்கு அச்சப்பட்டது. சாதி வாரி கணக்கெடுப்பு திட்டத்திற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்தது. நிதிஷ் குமார் சிக்கிக் கொண்டார். அவரை புறவாசல் வழியாக வெளியேற பாஜக வழிகொடுத்துள்ளது. சிறிய அழுத்ததிற்கே அவர் யூ - டேர்ன் அடித்து விட்டார். நிதிஷ் குமார் எங்களுக்கு தேவையில்லை" என்று காட்டமாக கூறினார்.












Click it and Unblock the Notifications