Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

10 முறை முதல்வர்.. ஆனால் எம்எல்ஏ கூட இல்லை! சூறாவளியே அடித்தாலும் சிஎம் பதவியை விட்டு தராத நிதிஷ்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பீகார் சட்டசபைத் தேர்தலில் வென்ற நிதிஷ் குமார் இன்று மாநில முதல்வராக 10வது முறையாகப் பதவியேற்றார். இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களைத் தவிர வேறு எங்கும் ஒருவர் இத்தனை முறை முதல்வராகப் பதவியேற்றதே இல்லை. யார் இந்த நிதிஷ்குமார்.. அரசியல் சூறாவளி அடிக்கும்போது அவரால் எப்படி தனது முதல்வர் நாற்காலியைக் காப்பாற்றிக் கொள்ள முடிகிறது என்பது குறித்துப் பார்க்கலாம்.

நிதிஷ்குமார் பீகாரின் பக்திபூர் நகரில் பரமேஸ்வரி தேவி- கவிராஜ் ராம் லக்கன் சிங் தம்பதிக்கு 1951 மார்ச் 1ம் தேதி பிறந்தவர். குர்மி விவசாய சமூகத்தைச் சேர்ந்த நிதிஷ் குமார், பீகார் பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றார். சில காலம் பீகார் மாநில மின்சார வாரியத்தில் வேலை செய்த அவர், பிறகு அவர் அரசியலில் ஈடுபட்டார்.

Nitish Kumar Sworn In as Bihar CM for Historic 10th Time How he manages to keep top post with him

நிதிஷ்

1974 முதல் 1977 வரை ஜெயபிரகாஷ் நாராயணனின் இயக்கத்தில் பங்கேற்ற நிதிஷ் குமார், பிறகு சத்யேந்திர நரேன் சின்ஹா தலைமையிலான ஜனதா கட்சியில் தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். தொடர்ந்து 1985ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் அவர் ஜனதா தளம் கட்சி சார்பில் வெற்றி பெற்றார். தொடக்கத்தில் அவர் லாலு பிரசாத் யாதவுடன் நெருக்கமாகப் பணியாற்றினார். 1989ல் லாலு பிரசாத் யாதவ் எதிர்க்கட்சித் தலைவரானபோது நிதிஷ் அவருக்கு உறுதுணையாக நின்றார்.

ஆனால், லாலுவின் ஆதிக்கம் அதிகரித்ததால், நிதிஷ் மற்றும் பிற தலைவர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டது. இதனால் இரு தலைவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.. அமைதியான தலைவராக அறியப்பட்ட நிதிஷ்குமார் 1994ம் ஆண்டு லாலுவுக்கு எதிராகக் கலகம் செய்தார். ஜார்ஜ் பெர்னாண்டஸ் தலைமையில் 14 எம்பிக்கள் பிரிந்து சென்று ஜனதா தளம் (ஜார்ஜ்) கட்சியை உருவாக்கினர். பெர்னாண்டஸ் முகமாக இருந்தாலும், நிதிஷ் தான் மூளையாகச் செயல்பட்டார். இந்த பிரிவு தான் பிறகு சமதா கட்சியாக மாறியது. நிதிஷ்குமார் தனது அரசியல் வாழ்க்கையில் எடுத்த முதல் தீர்க்கமான நடவடிக்கை இதுதான்!

பாஜக கூடன் கூட்டணி

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 1996ல் அவர் தனது அரசியலில் மற்றொரு முக்கிய முடிவை எடுத்தார். பாஜகவுடன் முதல்முறையாகக் கூட்டணி அமைத்தார். 1998 முதல் 2004 வரை வாஜ்பாய் அரசில் ரயில்வே அமைச்சர் உட்பட முக்கிய பொறுப்புகளை வகித்தார். அப்போது நிதிஷ்குமாரின் நிர்வாகத் திறன் வெகுவாக பாராட்டப்பட்டது.

2000ஆம் ஆண்டு நடந்த பீகார் தேர்தலைத் தொடர்ந்து நிதிஷ்குமார் முதல்வராகும் சூழல் ஏற்பட்டது. பாஜக ஆதரவு தரவே அவர் முதல்முறையாக முதலமைச்சர் பதவியேற்றார். இருப்பினும், அங்குத் தொங்கு சட்டசபை அமைந்து போதிய ஆதரவு கிடைக்காததால் அவரது அரசு ஏழு நாட்களில் கவிழ்ந்தது.

முதல்வர் பதவி

இருப்பினும், 5 ஆண்டுகள் கழித்து 2005ல் நிதிஷ் குமார் மீண்டும் வலுவாகக் களமிறங்கினார். அப்போது பிப்ரவரி மாதம் நடந்த தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அக்டோபர் மாதம் மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டது. அதில் நிதிஷ் கட்சி 88 இடங்களைப் பெற்ற நிலையில், என்டிஏ பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களில் வென்றது. இதன் மூலம் லாலு பிரசாத்தின் 15 ஆண்டு ஆட்சி முடிவுக்கு வந்தது. அடுத்த 9 ஆண்டுகள் எந்தவொரு சிக்கலும் இல்லாமல் அவர் ஆட்சி செய்தார்.

2013ல் பீகார் அரசியலில் சலசலப்பு ஏற்பட்டது. அப்போது நிதிஷ்குமாருக்கு பிரதமராக வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டதால், நிதிஷ் குமார் பாஜகவுடனான உறவை முறித்துக்கொண்டார். அப்போது அவர் கிட்டத்தட்ட 9 மாதங்கள் முதல்வர் பதவியையும் துறந்தார். அப்போது ஜேடியுவில் இருந்த ஜிதன் ராம் மஞ்சி முதல்வராக இருந்தார்.

கம்பேக்

இருப்பினும், 2015ல் நிதிஷ் ஒரு வலுவான கம்பேக்கை கொடுத்தார். யாரும் எதிர்பாராத விதமாக லாலு பிரசாத்துடன் மீண்டும் கை கோர்த்து. பாஜகவுக்கு எதிராக மகாபந்தன் கூட்டணியை உருவாக்கினார். அந்த தேர்தலில் 178 இடங்களில் இவர்கள் கூட்டணி வென்றது. நிதிஷ் தனது முதல்வர் நாற்காலியைத் தக்கவைத்துக் கொண்டார்.

இருப்பினும், இந்த கூட்டணி 2 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. நிதிஷுக்கும் ஆர்ஜேடிக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்ட நிலையில், ஒரே இரவில் மகாபந்தனில் இருந்து வெளியேறி, பாஜகவுடன் மீண்டும் இணைந்தார். பாஜகவின் ஆதரவுடன் மீண்டும் முதல்வராகப் பதவியேற்றார். ஆனால் அவரது அரசியல் யூடர்ன்கள் இத்தோடு நிற்கவில்லை.

மீண்டும் யூடர்ன்

2022-ல், ஜேடியு கட்சியை பிளவுபடுத்த பாஜக முயல்கிறது என்று குற்றம் சாட்டி, நிதிஷ் மீண்டும் கூட்டணியை விட்டு வெளியேறினார். மகாபந்தனில் மீண்டும் இணைந்தார். ஆனால், அதுவும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. 2024 லோக்சபா தேர்தல்கள் நெருங்கி வந்தபோது, தேசிய அரசியல் சூழல் மாறிக்கொண்டிருந்தது. அப்போது நிதிஷ் மீண்டும் என்டிஏ கூட்டணியில் இணைந்தார். எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தாலும் கூட பீகார் நலனுக்காக இந்த முடிவு என ஒரு வார்த்தையில் முடித்துக் கொண்டார் நிதிஷ்!

லோக்சபா தேர்தலில் கணிசமான இடங்களை நிதிஷ் வென்ற நிலையில், கூட்டணியிலும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இந்தச் சூழலில் தான் 2025 தேர்தலில் என்டிஏ பிரம்மாண்ட வெற்றியை பெற்றிருக்கிறது. இதன் மூலம் அவர் 10வது முறையாக முதல்வராகப் பதவியேற்று இருக்கிறார். வடகிழக்கு மாநிலங்களைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால்.. வேறு எந்த மாநிலத்திலும் ஒருவர் இவ்வளவு முறை முதல்வராகப் பதவியேற்றதில்லை. அரசியல் கொந்தளிப்புகள், மாற்றங்கள், என எது நடந்தாலும் நிதிஷ்குமார் தனது முதல்வர் பதவிக்கு ஒவ்வொரு முறையும் அவர் ஒரு வழியைக் கண்டுபிடித்த வந்திருக்கிறார்.

ஒரு முறை கூட எம்எல்ஏ இல்லை

இதில் மற்றொரு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் அவர் முதல்வராகப் பதவியேற்ற பிறகு ஒரு முறை கூட எம்எல்ஏவாக தேர்வாகவில்லை. அதாவது நிதிஷ் குமார் 1985ல் சட்டசபை தேர்தலில் வென்றார். அதன் பிறகு 1995 பீகார் தேர்தலில் வென்றாலும் கூட அவர் அதை ராஜினாமா செய்துவிட்டு தேசிய அரசியலில் கவனம் செலுத்தினார். 2005ல் அவர் முதல்வராகப் பதவியேற்ற பிறகு ஒரு முறை கூட எம்எல்ஏவாக தேர்வாகவில்லை. அவர் அங்குள்ள சட்டமேலவை மூலமாகவே உறுப்பினராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்து வந்த பாதை

1985- பீகார் சட்டசபைக்கு நிதிஷ் குமார் முதல்முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1989- லாலு பிரசாத் யாதவ் எதிர்க்கட்சி தலைவராக வர ஆதரவு வழங்கினார்.

1994- லாலுவிடம் இருந்து பிரிந்து சென்றார். அதைத் தொடர்ந்து சமதா கட்சி உருவானது.

1996- பாஜகவுடன் கூட்டணி அமைத்தார்.

1998 - 2004 வரை- வாஜ்பாய் தலைமையிலான என்டிஏ கூட்டணியில் முக்கிய அமைச்சராக இருந்தார்.

2000- பீகாரில் முதன்முறையாக முதலமைச்சரானார். ஆனால் 7 நாட்கள் மட்டுமே அரசு நீடித்தது.

2005- பாஜக. ஆதரவுடன் நிதிஷ் மீண்டும் முதலமைச்சராகி, லாலுவின் 15 ஆண்டு ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தார்.

2013- பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டார்.

2015- லாலு பிரசாத் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து மகாபந்தன் கூட்டணியை உருவாக்கி மீண்டும் முதலமைச்சரானார்.

2017- மீண்டும் என்டிஏ கூட்டணிக்குத் திரும்பி ஆறாவது முறையாக முதலமைச்சரானார்.

2020- என்டிஏ மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது, நிதிஷ் குமார் மீண்டும் முதலமைச்சரானார்.

2022- பாஜகவுடன் பிரிந்து மீண்டும் மகாபந்தன் கூட்டணியில் இணைந்தார்.

2024- மகாபந்தன் கூட்டணியிலிருந்து விலகி, என்டிஐவில் மீண்டும் ஐக்கியமானார்.

2025- பீகார் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று, பத்தாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+