நிதிஷ் குமார் சொன்ன வார்த்தை.. குலுங்கிக் குலுங்கி சிரித்த பிரதமர் மோடி.. NDA கூட்டத்தில் ருசிகரம்!
டெல்லி: இன்று டெல்லியில் நடந்த என்.டி.ஏ கூட்டத்தில் ஜேடியு தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ் குமார் பேச்சால், குலுங்கிக் குலுங்கி சிரித்தார் பிரதமர் நரேந்திர மோடி.
தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் உள்ள பழைய நாடாளுமன்ற கட்டடத்தின் மைய அரங்கில் இன்று நடைபெற்றது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார், சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட தலைவர்களும், புதிதாக எம்.பிக்களாக தேர்தெடுக்கப்பட்டவர்களும் கலந்துகொண்டனர்.

அப்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்ற தலைவர் மற்றும் மக்களவைத் தலைவராக நரேந்திர மோடியின் பெயரை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்மொழிந்தார். தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அதனை வழிமொழிந்தார். அதன் பின்னர் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஒவ்வொருவராக பேசி பிரதமராக மோடியை தேர்வு செய்வதற்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.
பீகார் முதல்வரும் ஜேடியு தலைவருமான நிதிஷ் குமார் பேசுகையில், "இன்று நாம் அனைவரும் ஒன்றாக இணைந்திருப்பது மிக நல்ல விஷயம். நாங்கள் எல்லோரும் உங்களுடன் சேர்ந்து பணியாற்றுவோம் பிரதமர் மோடி அவர்களே. ஞாயிற்றுக் கிழமை நீங்கள் பிரதமராக பதவியேற்க இருக்கிறீர்கள். நான் இன்றே நீங்கள் பதவி ஏற்றிருக்கலாம் என விரும்புகிறேன். நீங்கள் எப்போது உறுதிமொழி ஏற்றாலும் நாங்கள் உங்களுடன் இருப்போம். நாங்கள் உங்கள் தலைமையில் இணைந்து பணியாற்றுவோம்.
எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் இந்த தேசத்துக்கும் சரி எங்கள் மாநிலத்துக்கும் சரி எதுவும் செய்ததில்லை. இன்று அவர்கள் சில இடங்களில் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் அடுத்த முறை நீங்கள் ஆட்சிக்கு வரும்போது அவர்கள் யாருமே, எங்குமே வெற்றி பெற்றிருக்க மாட்டார்கள்.
நரேந்திர மோடி இந்தியப் பிரதமராவதை எனது ஐக்கிய ஜனதா தளம் ஆதரிக்கிறது. 10 ஆண்டுகளாக அவர் பிரதமராக இருந்ததையும், இப்போது மீண்டும் பிரதமராக இருப்பதையும் எண்ணி நாங்கள் மகிழ்ச்சி கொள்கிறோம். அவர் இந்த தேசத்துக்காக சேவை செய்துள்ளார். அந்தச் சேவையில் ஏதேனும் மிச்சம் இருந்திருந்தால் அவற்றை இந்த ஆட்சியில் அவர் பூர்த்தி செய்வார். இனி எப்போதும் நாங்கள் அவருடன் இருப்போம்" எனத் தெரிவித்தார்.
நிதிஷ் குமாரின் பேச்சை பிரதமர் முதல் அனைத்து பாஜகவினரும் உற்சாகத்துடன் கேட்டு ரசித்து கைதட்டி ஆர்ப்பரித்தனர். குறிப்பாக நிதிஷ் குமார், "இந்த முறை ஒரு சில இடங்களில் வெற்றி பெற்றவர்கள் அடுத்த முறை எங்குமே ஜெயிக்க மாட்டார்கள்" என்று கூறியபோது பிரதமர் மோடி குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார். பிரதமர் மோடி மட்டுமின்றி பல பாஜக தலைவர்களும், கூட்டணி கட்சிகளைச் சேர்ந்தவர்களும் நிதிஷ் பேச்சை ரசித்துச் சிரித்தனர்.

கடந்த 10 ஆண்டுகளில் நிதிஷ் குமார் ஐந்து முறை கூட்டணி மாறியுள்ளார். இந்தியா கூட்டணி அமைப்பதிலும் முக்கிய பங்காற்றிய நிதிஷ் குமார், அதன்பிறகு ஒதுங்கிக் கொண்டு, பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தார். இதனால் அவரை "பல்டி குமார்" என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கிண்டல் செய்து வந்தன. தேர்தல் முடிவுகளுக்குப் பின் பாஜக மெஜாரிட்டி பெறாத நிலையில் இப்போதும் நிதிஷ் கூட்டணி மாறலாம் என்ற பேச்சுகள் நிலவின.
ஆனால், அத்தகைய பேச்சுகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நிதிஷ் குமார் இன்று நடந்து கொண்டார். பிரதமர் மோடி காலை தொட்டு ஆசி பெறவும் முயன்றார் நிதிஷ் குமார். அதை தடுத்து, கையை பற்றிக்கொண்டார் பிரதமர் மோடி. மோடி தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு புது நம்பிக்கை பாய்ச்சும் வகையில் இன்று பேசி உள்ளார் நிதிஷ் குமார்.












Click it and Unblock the Notifications