காங்கிரஸ் உடன் கூட்டணி கிடையாது.. பாஜகவுக்கு எம்.எல்.ஏக்களை சப்ளை செய்கிறது.. கெஜ்ரிவால் காட்டம்
டெல்லி: "காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி கிடையாது. 2027 கோவா சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிடும்" என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கோவாவில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். வரும் 2027 ஆம் ஆண்டு கோவாவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள சூழலில், கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தும் விதமாக இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால்.

மாயேம் பகுதியில் ஆம்ஆத்மி கட்சி அலுவலகத்தை திறந்து வைத்த பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால், "காங்கிரஸ் கட்சியுடன் எந்த சூழ்நிலையிலும் கூட்டணி கிடையாது. கடந்த சில ஆண்டுகளாக எம்எல்ஏக்களை காங்கிரஸ் மொத்தமாக பாஜகவுக்கு சப்ளை செய்து வருகிறது. எதிர்காலத்தில் எந்தவொரு காங்கிரஸ் எம்எல்ஏவும் பாஜவுக்கு மாற மாட்டார்கள் என்று கோவா வாக்காளர்களுக்கு அக்கட்சியால் உறுதியளிக்க முடியுமா?
2017 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் 13 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜவுக்கு தாவினர். 2022 ஆம் ஆண்டில் மட்டும் 10 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனர். ஆம்ஆத்மி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்தால், அது பாஜவுக்கு எம்எல்ஏக்களை வழங்குவதற்கு சமமாகி விடும். கோவாவில் பாஜக அரசு அமைவதற்கு உதவும் வகையிலான எந்த நடவடிக்கையிலும் நாங்கள் ஈடுபட மாட்டோம்.
கோவாவில் அமைந்துள்ள காங்கிரஸ் மற்றும் பாஜகவின் சீரழிந்த அரசியல் கட்டமைப்பை வேரோடு பிடுங்கி எறிந்துவிட்டு, கோவா மக்களுக்கு ஒரு புதிய விருப்பத்தை வழங்க வேண்டிய நேரம் வந்து விட்டது.
சட்டவிரோத கட்டுமானம், சட்டவிரோத சுரங்கம் தோண்டுதல், ஊழல், வன்முறை, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, அதிக குற்ற விகிதம், குண்டும் குழியும் நிறைந்த சாலைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சுற்றுலாவாசிகளின் வருகை சரிவு ஆகியவற்றை கோவா கடந்த 13 ஆண்டுகளாக கண்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications