“இந்தியா” கூட்டணிக்கு "வெற்றிகரமான தோல்வி".. நம்பிக்கையில்லா தீர்மானத்தின் சூட்சமம்
டெல்லி: மக்களவையில் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கி இருக்கும் நிலையில், இதில் தோற்றாலும் இந்தியா கூட்டணிக்கு வெற்றிகரமான தோல்விதான் என்று கூறப்படுகிறது. அது எப்படி? விரிவாக பார்ப்போம்.
"வெற்றிகரமான தோல்வி".. தமிழ்நாட்டில் செய்திகளை தொடர்ந்து கவனித்து வருபவர்களால் மறக்க முடியாத சொற்பதம் இது. இதை சொன்னவர் தற்போது தெலுங்கானா மாநில ஆளுநராகவும், புதுச்சேரி துணை நிலை ஆளுநராகவும் பதவி வகித்து வரும் தமிழிசை சவுந்திரராஜன்.

கடந்த 2018 ஆம் ஆண்டு ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநில சட்டமன்ற தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றியது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சவுந்திரராஜன் பாஜகவுக்கு இது வெற்றிகரமான தோல்வி என்று கூறி இருப்பார். அப்போது அதன் அர்த்தம் புரியவில்லை என்றவர்கள் கூட இப்போது அதை பயன்படுத்தி வருகிறார்கள்.
தமிழிசை சவுந்திரராஜன் உதிர்த்த அந்த தொலைநோக்கு பார்வைகொண்ட சொற்பதம் தற்போது நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கும் பொருந்திப்போகிறது. ஆம், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வரும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி எம்பிக்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளனர்.
இன்று மக்களவையில் அதன் மீதான விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்களவையில் உள்ள 545 இடங்களில் பாஜக பெரும்பான்மையாக 301 இடங்களை வைத்து உள்ளது. காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ஆர்ஜேடி, ஜேடியு உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் பலம் பாஜகவின் பலத்தை விட 2 மடங்கு குறைவு.
எனவே தங்களால் ஆளும் பாஜக அரசை கவிழ்க்க முடியாது என்று தெரிந்து எதிர்க்கட்சிகள் இதை கொண்டு வர காரணம் இருக்கிறது. மக்களவையில் மணிப்பூர் விவகாரம் குறித்து பல்வேறு அமளிகள், போராட்டங்களுக்கு பிறகும் பேசாமல் உள்ள பிரதமர் மோடியை பேச வைக்க வேண்டும் என்பதே எதிர்க்கட்சிகளின் முதன்மை நோக்கம்.

நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும்போது ஆளும் கட்சி தரப்பில் பேச வேண்டும். அதன் தலைவரான பிரதமர் நரேந்திர மோடியும் மக்களவையில் பேசுவார். நாளை அவர் பேசுவார் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது ஒரு காரணம். இது அல்லாமல், 10 மாதங்களில் மக்களவை தேர்தலை சந்திக்க உள்ளது இந்தியா.
எனவே இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் வாயிலாக மணிப்பூர் விவகாரத்துக்கு அதிக முக்கியத்துவம் கிடைக்கும். புதிதாக உருவாகி இருக்கும் எதிர்க்கட்சிகளின் "இந்தியா" கூட்டணி குறித்தும் மக்கள் மத்தியில் சென்றடையும். இதன் காரணமாகவே காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ் என கட்சி பெயர்களை பதாகைகளில் எழுதாம இந்தியா என்று குறிப்பிட்டு எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எனவே இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் இந்தியா கூட்டணி தோல்வியடைந்தாலும், தமிழிசை ஸ்டைலில் சொல்லப்போனால் அது வெற்றிகரமான தோல்வியாகவே கருதப்படும்.












Click it and Unblock the Notifications