மசோதாக்களை காலவரம்பின்றி ஆளுநர்கள் வைத்திருக்க முடியுமா? ஓய்வு நாளில் விளக்கமாக சொன்ன நீதிபதி கவாய்
டெல்லி: மசோதாக்கள் மீது முடிவு எடுக்கும் விவகாரத்தில் குடியரசுத் தலைவர், ஆளுநர்களுக்கு காலக்கெடு விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கடந்த 20ஆம் தேதி தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு தொடர்பாக உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் நேற்று விளக்கமளித்து பேசினார். அப்போது, மாநில ஆளுநர்கள் மசோதாக்களை காலவரையின்றி வைத்திருக்க முடியாது என கூறினார்.
தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் கிடப்பில் போட்டிருந்தார். ஆளுநர் மசோதாக்களை கிடப்பில் போட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தை நாடியது. நிலுவையில் இருக்கும் மசோதாக்கள் மற்றும் துணைவேந்தர்கள் நியமனத்திற்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் ஆளுநருக்கு உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனுவை தாக்கல் செய்தது.

காலெக்கெடு விதிக்க முடியாது
இந்த மனுவை நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. நீண்டகால விசாரணைக்குப்பின் கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், மாநில அரசுகள் நிறைவேற்றும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதித்து உத்தரவிட்டிருந்தது.
இதில் 14 கேள்விகளை எழுப்பி குடியரசுத் தலைவர் உச்ச நீதிமன்றத்திடம் விளக்கம் கேட்டிருந்தார். இதை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. கடந்த 20ஆம் தேதி, நீதிபதிகள், மசோதாக்கள் மீது முடிவு எடுப்பது தொடர்பாக ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதிக்க முடியாது என தீர்ப்பு வழங்கியது.
பி ஆர் கவாய் விளக்கம்
இந்த தீர்ப்பு வழங்கிய அமர்வுக்கு தலைமை வகித்தவரும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியுமான கவாய், நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார். பணி ஓய்வு பெற இருந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, குடியரசுத் தலைவர் விளக்கம் கேட்டிருந்த 14 கேள்விகள் தொடர்பாக அளிக்கப்பட்ட தீர்ப்பு குறித்து விளக்கம் அளித்தார். அப்போது கவாய் கூறியதாவது:-
மசோதாக்கள் மீது முடிவு எடுக்கும் விவகாரத்தில் காலக்கெடுவை மட்டும் தளர்த்தியுள்ளோம். அதே நேரத்தில் ஆளுநர்கள் மசோதா மீது முடிவு எடுக்காமல் காலவரையின்றி வைத்து இருக்க முடியாது என கூறி சமநிலையான தீர்ப்பு அளித்திருக்கிறோம். காலக்கெடு வரையறுக்கப்படாத இடங்களில் நீதிமன்றங்கள் அதை விதிப்பதற்கு அரசியல் சாசனம் அனுமதிக்கவில்லை.
சூர்யகாந்த் நியமனம்
அதே நேரத்தில் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலவரையின்றி ஆளுநர் வைத்து இருக்க முடியாது என்று நாங்கள் கூறியிருக்கிறோம். அளவுக்கு அதிகமான கால தாமதங்களில் நீதிமன்றம் ஆய்வு செய்ய முடியும்" என்றார்.
கடந்த மே மாதம் உச்ச நீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் பதவியேற்றார். 6 மாதங்களாக தலைமை நீதிபதியாக பதவி வகித்த பி.ஆர். கவாயின் பதவிக்காலம் நேற்றுடன் முடிந்த நிலையில், அவர் ஓய்வு பெற்றார். நாட்டின் புதிய தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 53வது தலைமை நீதிபதியாகும் சூர்யகாந்திற்கு குடியரசுத் தலைவர் இன்று பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.












Click it and Unblock the Notifications