சோனியாவை யாராலும் பலவீனமாக்க முடியாது! கபில் சிபலுக்கு மல்லிகார்ஜூனா கார்கே பதிலடி! முற்றும் மோதல்
டெல்லி: சோனியா காந்தியை யாராலும் பலவீனமாக்க முடியாது என காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.
உத்தர பிரதேசம், மணிப்பூர், உத்தகாண்ட், கோவா, பஞ்சாப் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்துள்ளது. இதனால் ஜி23 அதிருப்தி தலைவர்கள் மீண்டும் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் மீது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான கபில் சிபல் வெளிப்படையாக விமர்சனம் செய்து தருகிறார். ‛காந்தி குடும்பத்தினர் கட்சி தலைவர் பதவியில் இருந்து வெளியே வரவேண்டும். வேறு நபருக்கு கட்சி பதவியை வழங்க வேண்டும்'' என தெரிவித்தார்.
தாராள கட்சி நிதி...சோனியா, ராகுலை மிஞ்சிய பெருந்தலைகள்...அம்பலப்படுத்திய தேர்தல் கமிஷன்
பலவீனமாக்க முடியாது
இதற்கு காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது: கபில் சிபல் சிறந்த வழக்கறிஞராக இருக்கலாம். ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு நல்ல தலைவராக அவரால் இருக்க முடியாது. அவர் எந்தவொரு கிராமங்களுக்கும் சென்று காங்கிரஸ் கட்சியை வளர்த்தது இல்லை. தற்போது வேண்டுமென்றே கட்சியை பலவீனப்படுத்த முயற்சிக்கிறார். சோனியா காந்தியை யாராலும் பலவீனமாக்க முடியாது‛‛ என்றார்.
பதவியை விட மனமில்லை
இதேபோல் லோக்சபையின் எதிர்க்கட்சி தலைவரான ஆதிர் ரஞ்சன் சவுத்ரியும் கபில் சிபலை விமர்சனம் செய்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கபில் சிபல் அமைச்சராக இருந்தார். தற்போது ஆட்சி அதிகாரத்தில் காங்கிரஸ் இல்லாததால் அவர் கவலைப்படுகிறார். ஜி23 தலைவர்களுக்கு பதவியை விட்டு விலகி நிற்க மனமில்லை. இதனால் தான் காங்கிரஸ் கட்சியை விமர்சித்து தங்களை காப்பாற்றி கொள்கின்றனர்'' என தெரிவித்தார்.
அதிரடி நடவடிக்கை
இந்த 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டது. இதையடுத்து இந்தியா முழுவதும் கட்சியில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் இதுதொடர்பாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 5 மாநில காங்கிரஸ் தலைவர்களின் பதவிகளை ராஜினாமா செய்ய அதிரடி உத்தரவிடப்பட்டது.
பதவிகள் பறிக்க முடிவு
இதுதவிர பிற மாநில காங்கிரஸ் தலைவர்களின் செயல்பாட்டையும் கட்சி மேலிடம் ஆய்வு செய்ய உள்ளது. இதில் சரியாக செயல்படாத தலைவர்களிடம் இருந்து பதவிகளை பறிக்கவும், விரைவில் கட்சியில் உள்கட்சி தேர்தல் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.