பார்வையாளர்களுக்கு பாஸ் கிடையாது.. எம்.பிக்களின் உதவியாளர்களுக்கும் அனுமதி இல்லை.. சபாநாயகர் அதிரடி!
டெல்லி: நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவத்தை தொடர்ந்து இனி பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.
இன்று (டிசம்பர் 12) நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் 22வது ஆண்டு பாராளுமன்ற தாக்குதல் சம்பவத்திற்கு நினைவு அஞ்சலி அனுசரிக்கப்பட்டது. தொடர்ந்து கூட்டத்தொடரின் பூஜ்ஜிய நேரம் நடைபெற்ற நிலையில் நாடளுமன்றத்தில் பார்வையாளர்களாக அரங்கில் அமர்ந்து இருந்த 2 இளைஞர்கள் திடீரென பாதுகாப்பு வளையத்தை மீறி மக்களவை அரங்கிற்குள் குதித்தனர்.

மேலும் அவர்கள், மஞ்சள் நிற வண்ணப்புகை வரும் வெடிபொருளையும் உள்ளே பரவ செய்தனர். இதனால் மக்களவையில் பெரும் பதற்றம் உண்டானது. அதே நேரத்தில் வெளியிலும் இருவர் கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற வளாகத்தில் கூடுதல் பரபரப்பு தொற்றிக்கொண்டது. அத்துமீறி நுழைந்தவர்களில் ஒருவர், மைசூர் மக்களவை பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா பரிந்துரையில் வந்ததும் தெரியவந்தது.
மக்களவையில் நுழைந்த இருவரையும் பாதுகாவலர்கள் கைது செய்தனர். அதே போல வெளியில் ஒரு பெண், ஒரு இளைஞர் என இருவர் கைது செய்யப்பட்டனர். நாடளுமன்றத்தில் மக்களவைக்குள் நுழைந்த இருவரும் மகாராஷ்டிராவை சேர்ந்த சாகர் சர்மா, டி மனோரஞ்சன் என்பவர்களும் நீலம் எனும் ஹரியானவை சேர்ந்த ஒரு பெண்ணும், மகாராஷ்டிராவை சேர்ந்த அமோல் ஷிண்டே என்ற இளைஞரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த பாதுகாப்பு மீறல் சம்பவத்திற்குப் பிறகு பாராளுமன்றத்தில் பார்வையாளர்களுக்கான அனுமதி வழங்குவதற்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தடை விதித்துள்ளார். மக்களவையில் பாதுகாப்பு மீறல் குறித்து முழுமையான விசாரணை நடைபெற்று வருவதாகவும் ஓம்பிர்லா தெரிவித்தார். நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், இனி நாடாளுமன்ற உறுப்பினர்களின் உதவியாளர்களுக்கும் நாடாளுமன்ற வளாகத்தில் அனுமதி இல்லை என்றும், மத்திய அமைச்சர்களின் உதவியாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்றும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்றத்தின் மக்களவைக்குள் பார்வையாளராக உள்ளே செல்வதற்கு எம்பியின் பரிந்துரை கடிதம் அவசியம். இந்தக் கடிதத்தின் அடிப்படையிலேயே நுழைவுச் சீட்டு வழங்கப்படும். அவர்களுக்கு பாதுகாப்பு சோதனை மேற்கொள்ளப்படும். மேலும் அடையாள அட்டைகளை சரிபார்க்கப்படும். அதன்பிறகுதான் அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications