வாய்ப்பில்லை ராஜா.. ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல் வந்தால் அரசுக்கு 2 லட்சம் கோடி இழப்பு..சுஷில் மோடி பேச்சு
டெல்லி: அரசுக்கு ஆண்டுதோறும் இரண்டு லட்சம் கோடி ரூபாய் வரை வருமான இழப்பு ஏற்படும் என்பதால் அடுத்த 8 முதல் 10 ஆண்டுகள் வரை பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர முடியாது என்று பாஜக மூத்த தலைவர் சுஷில் மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இந்தாண்டு தொடக்கம் முதலே பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. நாட்டின் சில மாநிலங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயையும் தாண்டி, விற்பனையானது. இதனால் நடுத்தர வர்க்கத்தினர் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் குறையாமல் இருந்த பெட்ரோல், டீசல் விலை இன்று முதல்முறையாகக் குறைந்துள்ளது. சர்வதேச அளவில் பெட்ரோல், டீசல் விலை குறைந்ததால், பெட்ரோல் விலை 18 பைசாக்களும் டீசல் விலை 17 பைசாக்களும் குறைக்கப்பட்டன.
ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல்?
இருப்பினும், தற்போது விற்கப்படும் விலைகூட அதிகம் தான் என்றும் பெட்ரோல் டீசல் விலையைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என்றும் ஒரு சாரார் வலியுறுத்தியுள்ளனர். இந்நிலையில், மத்திய மாநில அரசுகளுக்குப் பெரியளவில் வருவாய் பாதிக்கப்படும் என்பதால் பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர முடியாது என்று பாஜகவின் சுஷில் மோடி தெரிவித்துள்ளார்.
இரண்டு லட்சம் கோடி இழப்பு
இது குறித்து மாநிலங்களவையில் அவர் பேசுகையில், மத்திய மாநில அரசுகள் ஆண்டுதோறும் சுமார் ஐந்து லட்சம் கோடி ரூபாயை வரியாக பெட்ரோல் மற்றும் டீசல் மீது வசூலிக்கின்றன. எனவே, அவை ஜிஎஸ்டிக்குள் எடுத்து வரப்பட்டால் மாநில அரசுகளுக்கு ஆண்டுதோறும் இரண்டு லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும். எனவே அடுத்த 8 முதல் 10 ஆண்டுகளுக்கு பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டிக்குள் எடுத்து வர முடியாது என்று அவர் தெரிவித்தார்.
வரி குறையும்
தற்போது பெட்ரோலிய பொருட்கள் மீது 60% வரி விதிக்கப்படுவதாகத் தெரிவித்த அவர், ஜிஎஸ்டி வரம்பிற்குள் எடுத்துவந்தால் அதிகபட்சமாக 28% தான் வரி விதிக்க முடியும் என்றார். தற்போது பெட்ரோலிய பொருட்களில் 60 ரூபாய் வரியாக வசூலிக்கப்படுகிறது என்றும் ஆனால் இது ஜிஎஸ்டிக்குள் வந்தால் 14 ரூபாயாகக் குறையும் என்றும் அவர் கூறினார். மத்திய அரசு வசூலிக்கும் வரியிலும் சுமார் 42% மாநில அரசுகளுக்கே செல்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
வரி வருவாய்
பெட்ரோல், டீசல் மீது வசூலிக்கப்படும் வரி மத்திய அரசுக்கு மட்டும் செல்வதில்லை. மாநில அரசுக்கும் பெரும்பகுதி செல்கிறது. மேலும் வரியாக வசூலிக்கப்படும் தொகையைக் கொண்டு பொதுமக்களுக்கு மின்சாரம் மற்றும் குடிநீர் வசதி ஆகியவற்றையே அரசு தருவதாகவும் அவர் கூறினார். மேலும், மோடி அரசுக்கு மட்டுமே ஜிஎஸ்டியை அமல்படுத்தும் துணிச்சல் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.