”நான் ஒருங்கிணைப்பாளர்” கிளிப்பிள்ளைப் போல் ஓபிஎஸ் பேசுகிறார்.. டெல்லியில் சீறிய சி.வி.சண்முகம்!
டெல்லி: அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு கடிதங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவி சண்முகம், ஓபிஎஸ் கிளிப்பிள்ளை போல் பேசி வருவதாக விமர்சித்துள்ளார்.
அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை சுயவிருப்பத்துடன் தேர்வு செய்ததாகவும், முழு ஆதரவு அளிப்பதாகவும் பொதுக்குழு உறுப்பினர்களிடம் இருந்து பெறப்பட்ட ஆதரவு கடிதங்கள் தேர்தல் ஆணையத்திடம் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி சார்பாக அதிமுக எம்பி சிவி சண்முகம் 25,00க்கும் அதிகமான பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு கடிதங்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்கியுள்ளார். இந்த நடவடிக்கை பொதுக்குழு தொடர்பான ஓபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கில், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு முக்கிய சாதகமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லி சி.வி.சண்முகம் பேட்டி
இந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து அதிமுக எம்பி சிவி சண்முகம் கூறுகையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் சில வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டதால், அதிமுக விவகாரம் தொடர்பாக இந்தியத் தேர்தல் ஆணையத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து, அதிமுக பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பளித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும் செல்லும் என்று தீர்ப்பளித்தது.

தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிப்பு
அந்தத் தீர்ப்பின் நகலையும், 2500க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவுக் கடிதங்களை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளோம் என்று தெரிவித்தார். தொடர்ந்து ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் அறிக்கை வெளியிட்டு வருவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, இது முற்றிலும் சட்டத்திற்கு புறம்பான செயல். ஆனால் ஓபிஎஸ் இப்படி செய்வதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஏற்கனவே அடியாட்களுடன் அதிமுக தலைமை அலுவலகத்தை சூறையாடியவர். இதுகுறித்து நீதிமன்ற வழக்குகள் முடிந்த பின்னர், நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

ஓபிஎஸ் பற்றி கருத்து
இதேபோல் தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் தரப்பில் கடிதங்கள் தாக்கப்பட்டது குறித்த கேள்விக்கு, ஓபிஎஸ் தரப்பில் இத்தனை பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளார்கள் என்றோ, தாம் தான் உண்மையான அதிமுக என்றோ எங்கேயும் கடிதம் அளிக்கவில்லை. அவர் சொல்வதெல்லாம், கிளிப்பிள்ளையைப் போல் நான் தான் ஒருங்கிணைப்பாளர் என்று கூறுகிறார்.

2,532 பேர் ஆதரவு
ஆனால் அதிமுக பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் பதவி ரத்து செய்யப்பட்டுவிட்டது. இதற்காக ஆதரவாக 2663 பொதுக்குழு உறுப்பினர்களில் 2,532 பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு அளித்து, இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்ந்தெடுத்துள்ளனர். இதனால் அதிமுக சார்பாக கொடுக்கப்பட்ட மனுக்கள் மீது பரிசீலனை செய்வதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. விரைவில் முடிவு எடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications