யோகி பக்கத்தில் சீட்! பணிவுத்திலகமாக ஓ.பன்னீர்செல்வம்! தம்பிதுரை மூலம் கெத்து காட்டிய எடப்பாடி!
டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நிகழ்வில் கலந்துகொண்ட அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடி முன்பு பணிவுத்திலகமாக காட்சியளித்தார்.
இதேபோல் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோரிடமும் வழக்கம் போல் தனது பணிவான வணக்கத்தை வைத்தார் பன்னீர்செல்வம்.
அதேவேளையில் எடப்பாடி பழனிசாமி தனக்கு பதில் தனது பிரதிநிதியாக தம்பிதுரையை அந்த நிகழ்ச்சிக்கு அனுப்பி வைத்து கெத்து காட்டியிருக்கிறார்.

திரவுபதி மர்மு
குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பழங்குடியின சமூகத்தை சேர்ந்த திரவுபதி மர்மு என்பவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவரது வேட்பு மனு தாக்கல் நிகழ்ச்சி இன்று நடைபெற்ற நிலையில் கூட்டணி கட்சி என்ற முறையில் அதில் பங்கேற்க வருமாறு அதிமுக தலைமைக்கு அழைப்பு வந்திருந்தது. டெல்லியில் ஏற்கனவே பிரதமர் மோடியையும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க முயற்சி செய்து கொண்டிருந்த பன்னீர்செல்வத்துக்கு, இந்த அழைப்பு கண்ணா லட்டு திண்ண ஆசையா என்பதை போல் அமைந்திருந்தது.

விமானம் பிடித்து
டிக்கெட் விலை சற்று அதிகமாக இருப்பினும் கூட உடனடியாக டெல்லிக்கு டிக்கெட் புக் செய்து நேற்றிரவே புறப்பட்டுச் சென்றுவிட்டார் ஓ.பன்னீர்செல்வம். இதனிடையே குடியரசுத் தலைவர் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் நிகழ்ச்சியில் பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் முக்கிய மத்திய அமைச்சர்கள் கலந்துகொண்டனர். கூட்டணிக் கட்சி பிரதிநிதிகளாக ஓ.பன்னீர்செல்வம், தம்பிதுரை, ரவீந்தரநாத் ஆகியோர் அந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

யோகி பக்கத்தில்
தம்பிதுரையும், ஓ.பன்னீர்செல்வமும் சரியாக பேசிக்கொள்ளவில்லை. அவர்கள் இருவரும் ஒன்றாக அமர்வதை கூட தவிர்த்து தங்களுக்கு நடுவில் வேறு ஒருவரை அமர வைத்தனர். இதனிடையே உபி முதல்வர் யோகி அருகில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சீட் ஒதுக்கப்பட்ட நிலையில் அவருக்கும் ஒரு கும்பிடு போட்டார் பன்னீர். அந்த நிகழ்ச்சி முடிந்து அங்கிருந்து புறப்படும் முன் பிரதமர் மோடி தனது அழைப்பை ஏற்று வந்தவர்களுக்கு வணக்கம் வைத்தார். அப்போது பவ்யமாகவும் பணிவுத்திலகமாகவும் ஓபிஎஸ் அவருக்கு வணக்கம் வைத்தார்.

முக்கிய சந்திப்பு
இதனிடையே எடப்பாடி பழனிசாமியின் பிரதிநிதியாக கலந்துகொண்ட தம்பிதுரை பவ்யமும் காட்டவில்லை பணிவும் காட்டவில்லை. இயல்பாக நின்று வணக்கம் வைத்தார். இன்றிரவு ஓபிஎஸ் சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் மாலையில் சில முக்கிய சந்திப்புகள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications