காங்கிரஸில் வாய்ப்பு மறுப்பு! ‛குட்பை’ கூறி பாஜகவில் ஐக்கியமானார் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங்
டெல்லி: லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில், ஒலிம்பிக் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் காங்கிரசிலிருந்து விலகி தற்போது பாஜகவில் இணைந்திருக்கிறார்.
கடந்த 2019ம் ஆண்டை போல இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி 22 மாநிலங்களுக்கு தேர்தல் தொடங்குகிறது. டெல்லியை பொறுத்த அளவில், மொத்தமுள்ள 7 தொகுதிகளுக்கும் மே மாதம் 25ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் டெல்லி அரசியலில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தற்போது காங்கிரஸிலிருந்து பாஜகவுக்கு ஒலிம்பிக் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் தாவியுள்ளார்.

டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜக தலைவர்கள் வினோத் தாவ்டே, ராம்வீர் சிங் பிதுரி மற்றும் ராஜீவ் பாபர் ஆகியோர் முன்னிலையில், இவர் கட்சியில் சேர்ந்திருக்கிறார். கடந்த 2019ம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் தெற்கு டெல்லி லோக்சபா தொகுதியில் விஜேந்தர் சிங் போட்டியிட்டிருந்தார். ஆனால், வெறும் 1.6 லட்சம் வாக்குகள் பெற்று பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதூரியிடம் தோல்வியடைந்தார். இதில் ரமேஷ் பிதூரி 6.8 லட்சம் வாக்குகளை பெற்று அபாரமாக வென்றிருந்தார்.
இந்நிலையில், விஜேந்தர் சிங் பாஜகவில் சேர்ந்திருப்பது தங்களுக்கு பலம் அளிப்பதாக இருப்பதாக பாஜக கூறியுள்ளது. அதேபோல கட்சி மாறியது குறித்து பேசிய விஜேந்தர் சிங், "தேசத்தின் நலனுக்காகவும், மக்களுக்கு சேவை செய்வதற்காகவும் பாஜகவில் இணைந்தேன். மேலும் மேலும் மக்களுக்கு உதவ விரும்புகிறேன்" என்று கூறியுள்ளார்.
இவர் கடந்த 2008ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்றிருந்தார். இதன் தொடர்ச்சியாக 2009ம் ஆண்டு நடைபெற்ற குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும், 2010 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கத்தையும் பெற்று இந்தியாவை சர்வதேச நாடுகளுக்கு மத்தியில் பிரபலமடைய செய்தார். இவரது சேவைகளை பாராட்டி 2010ல் இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இதனையடுத்து இவர் காங்கிரஸில் இணைந்தார்.
அப்போது, "எனது 20 ஆண்டுகளுக்கும் மேலான குத்துச்சண்டை வாழ்க்கையில் நான் எப்போதும் வளையத்தில் இந்தியாவை பெருமைப்படுத்தினேன். இப்போது என் நாட்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டு கட்சியில் என்னை இணைத்துக்கொண்ட காங்கிரஸ் கட்சிக்கும், ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்" என்று கூறியிருந்தார்.
இவர் ஜாட் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் ஹரியானாவில் இவருக்கு உள்ள செல்வாக்கை பயன்படுத்த பாஜக திட்டமிட்டிருக்கிறது. இந்தமுறை விஜேந்தருக்கு காங்கிரஸ் சீட் கொடுக்காததால்தான் அவர் பாஜகவுக்கு தாவியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications