வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு மத்திய அமைச்சரின் குட்நியூஸ்.. ஆன்லைனில் ஓட்டு போடும் வசதிக்கு பரிசீலனை
டெல்லி: வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் ஆன்லைனில் ஓட்டளிக்கும் வகையிலான வசதியை கொண்டு வருவது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது என மக்களவையில் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறினார்.
டெல்லி பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று மக்களவையின் கேள்வி நேரத்தில் மத்திய அமைச்சர்களிடம் கேள்விகள் எழுப்பப்பட்டது.
வைரமுத்துவின் நாட்படு தேறல் 2! ஏப்ரல் 17 முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வெளியாகிறது!
காங்கிரஸ் கட்சியின் எம்பிக்கள் மனிஷ் திவாரி முரளீதரன் ஆகியோர் ஓட்டுப்பதிவு இயந்திரம், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான ஓட்டுப்பதிவு முறை குறித்து கேள்வி எழுப்பி இருந்தனர். இதற்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ பதிலளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
நோக்கம்
தேர்தலில் கள்ள ஓட்டு செலுத்துவது என்பது தீவிரமான பிரச்சினையாக உள்ளது. கள்ள ஓட்டு செலுத்துவதை தடுப்பது குறித்து தொடர்ந்து கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இதில் ஒரு வழிமுறையாக தான் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கும் திட்டம் உள்ளது. இது தற்போது விருப்பத்தின் பேரில் மட்டுமே உள்ளது ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர் பட்டியிலில் பெயர் இருப்பதை தடுக்கவும், கள்ளஓட்டை தடுக்கவும் ‛ஒரேநாடு ஒரே வாக்காளர் பட்டியல்' முறையை கொண்டு வருவதை நோக்கமாக வைத்துள்ளோம்.
ஆன்லைனில் ஓட்டுப்பதிவு
வெளிநாடுகளில் பணியாற்றும் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை அளிப்பது எப்படி என்பது குறித்து ஆராயுமாறு இந்திய தேர்தல் ஆணையத்திடம் மத்திய அரசு கேட்டுள்ளது. அவர்களை ஆன்லைனில் ஓட்டு போட அனுமதிப்பது பற்றி பரிசீலனை நடந்து வருகிறது. இதில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. எந்த முடிவாக இருந்தாலும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அவசியமாகும்.
மத்திய அரசின் விருப்பம்
இந்திய தேர்தல் முறையை உலகம் முழுவதும் பாராட்டுகின்றனர். இதனால் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் குறித்த எந்த சந்தேகமும் வேண்டாம். தேர்தலின்போது மக்கள் அதிகமாக ஓட்டளிக்க வேண்டும் என்பதை மத்திய அரசு விரும்புகிறது. இருப்பினும் அதற்காக ஓட்டு போடுவதை கட்டாயமாக்குவதற்கு சட்டம் கொண்டு வரும் திட்டம் எதுவும் இல்லை.
கைதிகளுக்கு ஓட்டுரிமை
ஓட்டுரிமை என்பது ஒவ்வொருவரின் அடிப்படை உரிமை என்றாலும் கூட சிறைக்கு சென்றால் சில அடிப்படை உரிமைகளை இழக்க நேரிடும் சூழல் உள்ளது. சிறையில் உள்ளவர்களை ஓட்டு போடுமாறு மத்திய அரசு வற்புறுத்த முடியாது. ஏனென்றால் அவர்கள் கோர்ட்டின் அதிகார வரம்புக்குள் உள்ளனர்'' என்றார்.