"ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை.. எங்கள் ஆபரேஷன் தொடர்கிறது.." இந்திய விமானப்படை அறிவிப்பு
டெல்லி: இந்தியா பாகிஸ்தான் இடையே கடந்த சில நாட்களாகவே மோதல் நடந்து வந்தது. மோதலை பாகிஸ்தான் தொடங்கிய நிலையில், நேற்று அவர்களே மோதல் வேண்டாம் எனக் கோரிக்கை விடுத்ததால் இந்தியா அதை ஏற்றுக்கொண்டு மோதலை முடிவுக்குக் கொண்டு வந்தது. இதற்கிடையே ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை என்று விமானப்படை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்தியப் பாதுகாப்புப் படை கடந்த புதன்கிழமை காலை பாகிஸ்தானில் அதிரடியாகத் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 தீவிரவாத முகாம்களை இந்தியா அழித்தது. அதில் 100 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

ஆபரேஷன் சிந்தூர வெற்றியைப் பொறுக்காத பாகிஸ்தான் தொடர்ந்து இந்தியா மீது அத்துமீறித் தாக்குதல் நடத்தியது. பாக். தாக்குதல்களை முறியடித்த இந்தியா அதற்குச் சரியான பதிலடியைக் கொடுத்தது. இந்தியாவின் பதிலடியைத் தாங்க முடியாத பாகிஸ்தான் மோதல் வேண்டாம் எனக் கோரிக்கை விடுத்ததால் இந்தியா அதை ஏற்றுக்கொண்டு மோதலை முடிவுக்குக் கொண்டு வந்தது.
இதற்கிடையே ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை என்று விமானப்படை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான செயல்பாடுகள் இன்னும் தொடர்கிறது என்று பதிவிட்டுள்ள விமானப்படை, ஒதுக்கப்பட்ட பணிகளைத் துல்லியமாகத் தொழில்முறையுடன் வெற்றிகரமாக நிறைவேற்றினோம் என்றும் சரிபார்க்கப்படாத தகவல்களைப் பரப்பவும் நம்பவும் வேண்டாம் என்றும் பதிவிட்டுள்ளது.

இது தொடர்பாக மேலும், "இந்திய விமானப்படை ஆபரேஷன் சிந்தூரில் தனக்கு ஒதுக்கப்பட்ட பணிகளைத் துல்லியமாகவும், தொழில்முறையுடனும் வெற்றிகரமாக முடித்துள்ளது. நாட்டின் நலன்களைக் கருத்தில் கொண்ட திட்டமிட்டு விவேகமான முறையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆபரேஷன் இன்னும் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதால், சரியான நேரத்தில் விரிவான விளக்கவுரை அளிக்கப்படும். அதுவரை சரிபார்க்கப்படாத தகவல்களை நம்பவும் பரப்பவும் வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம்" என்று பதிவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications