போனமுறை நீட்.. இந்த முறை யுபிஎஸ்சி..நாளை முதல் நாடாளுமன்றத்தை முடக்க காத்திருக்கும் எதிர்க்கட்சிகள்!
டெல்லி: நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான யுபிஎஸ்சி முறைகேடுகள் குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 18-வது லோக்சபாவின் முதல் கூட்டத் தொடரில் நீட் தேர்வு முறைகேடுகளை முன்வைத்து நாடாளுமன்றத்தை முடக்கின எதிர்க்கட்சிகள். தற்போது யுபிஎஸ்சி தலைவர் மனோஜ் சோனி திடீர் ராஜினாமா செய்த விவகாரத்தை முன்வைத்து யுபிஎஸ்சி முறைகேடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
18-வது லோக்சபாவில் முதல் கூட்டத் தொடரில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தை ஒத்திவைத்துவிட்டு நீட் தேர்வு முறைகேடுகள் விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்பிக்கள் வலியுறுத்தினர். இதற்காக ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸும் கொடுக்கப்பட்டது. ஆனால் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் நாடாளுமன்றத்தில் பெரும் அமளி ஏற்பட்டது.

மேலும் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்கு பிரதமர் மோடி பதிலளித்த போது இருசபைகளிலும் மோடியை பேசவிடாமல் எதிர்க்கட்சி எம்பிக்கள் சபையின் மையப்பகுதிக்கு சென்று தொடர் முழக்கமிட்டனர். இதனால் இரு சபைகளின் நடவடிக்கைகள் முன்கூட்டியே ஒத்தி வைக்கப்பட்டன.
இந்த நிலையில் நாடாளுமன்ற மழைக்கால மற்றும் பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. இதனை முன்னிட்டு டெல்லியில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
நாடாளுமன்றத்தில் நாளை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையைத் தாக்கல் செய்ய உள்ளார். இதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வார்.
இந்தக் கூட்டத் தொடரில் நீட் தேர்வு முறைகேடுகளுடன் யுபிஎஸ்சி தேர்வு முறைகேடுகளையும் எழுப்புவதற்கு எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. யுபிஎஸ்சி என்பது மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமாகும். ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு தேர்வு நடத்தி தேர்ந்தெடுக்கக் கூடிய அமைப்பு இது.
கடந்த சில வாரங்களாக போலி சான்றிதழ்கள் கொடுத்து ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளானவர்கள் குறித்த விவரங்கள் தொடர்ச்சியாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன. மகாராஷ்டிராவின் பூஜா கேத்கர் தொடங்கி பலரும் போலி மாற்றுத் திறனாளி சான்றிதழ்களையும் போலி மதிப்பெண் சான்றிதழ்களையும் போலி வருமான சான்றிதழ்களையும் கொடுத்து தேர்வாகி இருப்பது அம்பலமாகிக் கொண்டே இருக்கிறது.
இந்த சர்ச்சைகள் பூதாகரமாக வெடிக்கும் முன்னரே யுபிஎஸ்சி தலைவர் மனோஜ் சோனி திடீரென பதவியை ராஜினாமா செய்தார். யுபிஎஸ்சி தலைவராக மனோஜ் சோனி நியமிக்கப்பட்ட போதே மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கடுமையாக எதிர்த்தனர். எந்த ஒரு தகுதியுமே இல்லாமல் குஜராத்தைச் சேர்ந்தவர்; பிரதமர் மோடிக்கு நெருக்கமானவர் என்ற காரணத்தாலேயே மனோஜ் சோனி நியமிக்கப்பட்டதாகவும் அப்போது குற்றம்சாட்டப்பட்டது.
தற்போது சொந்த காரணங்களுக்காக மனோஜ் சோனி ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். ஆனாலும் யுபிஎஸ்சி சர்ச்சை வெடிக்கும் முன்னரே அவரை காப்பாற்றும் வகையில்தான் மத்திய அரசு தரப்பு ராஜினாமா செய்ய வைத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் நாளை முதல் தொடங்க இருக்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் யுபிஎஸ்சி விவகாரத்தையும் எதிர்க்கட்சிகளான 'இந்தியா கூட்டணி' கிளப்ப திட்டமிட்டுள்ளனவாம்.












Click it and Unblock the Notifications