அடேங்கப்பா.. தேசியக்கொடியுடன் செல்பி.. மத்திய அரசு இணையதளத்தில் குவிந்த படங்கள்.. எவ்வளவு தெரியுமா?
டெல்லி: ஆகஸ்ட் 13ம் தேதி முதல் சுதந்திர தினமான நேற்று வரை வீட்டில் தேசியக்கொடி ஏற்றிய பொதுமக்கள் செல்பி எடுத்து மத்திய அரசின் இணையதளத்தில் பதிவிட்டனர். இது சாதனையாக மாறியுள்ள நிலையில் எவ்வளவு பேர் செல்பி எடுத்து அனுப்பினர் என்பது பற்றி மத்திய அரசு கூறியுள்ளது.
இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன நிலையில் இது மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. கடந்த ஓராண்டு காலம் இந்த சுதந்திர தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது
'ஆஸாதி கா அம்ருத் மஹோத்ஸவ்' எனும் பெயரில் இந்த சுதந்திர தினம் கடந்த ஓராண்டாக கொண்டாடப்பட்டது. மேலும் பிரதமர் நரேந்திர மோடி பொதுமக்களுக்கு சில வேண்டுகோள்களை விடுத்தார்.

நரேந்திர மோடி அழைப்பு
அதன்படி ஒவ்வொருவரும் திங்களின் சமூக வலைதள பக்கங்களின் முகப்பில் தேசியக்கொடியை படமாக வைக்க வேண்டும் என பிரதமர் மோடி கூறினார். இதுமட்டுமின்றி 'ஹர் கர் திரங்கா' பெயரில் ஆகஸ்ட் 13ம் தேதி முதல் 15 வரை 3 நாட்கள் வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்து இருந்தார். இதையடுத்து காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பல்வேறு இடங்களில் ஏராளமான பொதுமக்கள் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றி தேசப்பற்றை வெளிக்காட்டினர்.

இணையதளத்தில் படம் பதிவேற்றம்
மேலும் பொதுமக்கள் தங்களின் வீடுகளில் தேசிய கொடி ஏற்றியதன் முன்பு நின்று 'செல்பி' எடுத்து 'ஹர் கர் திரங்கா' என்கிற இணையதளத்தில் பதிவேற்ற மத்திய கலாசார அமைச்சகம் ஏற்கனவே கேட்டு கொண்டிருந்தது. இவ்வாறு பதிவிடும் நபர்களுக்கு சான்று வழங்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி பொதுமக்களும் அந்த இணையதளத்தில் தேசியக்கொடியுடன் செல்பி எடுத்து பதிவிட்டு சான்று பதிவிறக்கி கொண்டனர்.

5 கோடி பேர் பதிவு
இந்த நிலையில் தான் ஹர்கர் திரங்கா இணையதளத்தில் மொத்தம் 5 கோடி பேர் தேசியக்கொடியுடன் ‛செல்பி' எடுத்து பதிவிட்டுள்ளதாக மத்திய கலாசாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த அமைச்சகம் சார்பில், ‛‛நேற்று மாலை 4 மணி வரை 5 கோடி 'செல்பி' புகைப்படங்கள் 'ஹர் கர் திரங்கா' இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இது ஒரு பிரமாண்டமான சாதனை'' என கூறப்பட்டுள்ளது.

60 கோடிக்கு விற்பனை
மேலும் இன்னொரு சாதனையாக ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 15 வரை Gem இணையதளம் மூலம் பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் மாநிலங்களால் ரூ.60 கோடி மதிப்புள்ள 2.36 கோடிக்கும் அதிகமான தேசியக் கொடிகள் வாங்கப்பட்டுள்ளன என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சாதனையானது 'ஹர் கர் திரங்கா' இயக்கத்தின் மூலம் சாத்தியமானது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications