ஆச்சரியமா இருக்கே.. பிரதமர் மோடிக்கு மணிப்பூர் நியாபகம் ஒருவழியா வந்துவிட்டதே.. ப. சிதம்பரம் நறுக்
டெல்லி: மணிப்பூரில் பழங்குடியின சமூகத்தை சேர்ந்த இரண்டு இளம் பெண்கள் நிர்வாணமாக ஊர்வலம் அழைத்து செல்லப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள கொடூரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்துள்ள நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பிரதமருக்கு சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.
மணிப்பூரில் சிறுபான்மையினராக இருக்கும் குக்கி பழங்குடி மக்கள் அங்குள்ள மலை பிரதேசங்களில் வாழ்ந்து வருகின்றனர். இந்த மலைப்பகுதி மற்றும் அதையொட்டியுள்ள சமவெளி பகுதிகளில் இவர்களை தவிர வேறு யாரும் நிலங்களை வாங்கவோ விற்கவோ முடியாது. இப்படி இருக்கையில் அங்கு பெரும்பான்மையாக இருக்கும் மைத்தேயி/மெய்டெய் மக்கள் தங்களையும் பழங்குடியினர் பட்டியலில் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.

மைத்தேயி/மெய்டெய் மக்களுக்குதான் மாநிலத்தில் அதிக அளவுக்கு வாக்குகள் இருக்கிறது. எனவே இதனை கவனித்த பாஜக அவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒப்புக்கொண்டது. இதையே தனது தேர்தல் வாக்குறுதியாக வைத்து சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலை சந்தித்தது. எதிர்பார்த்ததை போலவே பாஜக இந்த தேர்தலில் வெற்றி பெற்றது. இதனையடுத்து மைத்தேயி/மெய்டெய் மக்கள் தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தினர்.
நீதிமன்றமும் இதற்கு சாதகமாக உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில் குக்கி மக்கள் போராட்டத்தை தொடங்கினர். மைத்தேயி/மெய்டெய் மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்தால் தங்கள் உரிமைகளை இழக்க நேரிடும் என்று அவர்கள் விமர்சித்து போராட்டத்தில் இறங்கினர். இந்நிலையில், இதற்கு எதிராக மைத்தேயி/மெய்டெய் மக்கள் பேரணி சென்றனர். இது ஒரு கட்டத்தில் மோதலாக வெடித்தது.
மோதலில் அரசின் அதிகாரப்பூர்வ கணக்குப்படி 135க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அதேபொல 5,036 தீவைப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன, வன்முறைகள் தொடர்பாக 5,889 வழக்குகள் பதிவு செய்யப் பட்டு 144 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாநிலத்தில் சுமார் 36,000 பாதுகாப்புப் படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர், 40 இந்திய காவல் சேவை (ஐபிஎஸ்) அதிகாரிகள் மற்றும் 20 மருத்துவக் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். எனினும், இப்போது வரை மணிப்பூரில் அமைதி திரும்பவில்லை. 300-க்கும் மேற்பட்ட முகாம்களில் 60 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர் மோடி தலையிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. ஆனால் பிரதமர் இது குறித்து எதுவும் பேசவில்லை. தற்போது இளம்பெண்கள் நிர்வாணமாக ஊர்வலம் அழைத்து செல்லப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வீடியோ பரவலாக பகிரப்பட்ட நிலையில் பிரதமர் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
"மணிப்பூர் சம்பவம் பெரும் வேதனையை கொடுத்திருக்கிறது. இதயம் கனத்துள்ளது. அனைத்து மாநில முதல்வர்களும் இந்திய பெண்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை தப்பிக்க விடமாட்டோம்" என்று பிதமர் கூறியுள்ளார். மணிப்பூரில் கலவரங்கள் கடந்த மே மாதங்களே தொடங்கிவிட்டன. ஆனால், அப்போதெல்லாம் இது குறித்து பேசாத பிரதமர் மோடி தற்போது பேசியிருப்பது குறித்து எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் தெரிவித்து வருகின்றன.
அதேபோல காங்கிரஸ் மூத்த தலைவரான ப.சிதம்பரம், "மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் தனது மௌனத்தை கலைத்துள்ளார். அமெரிக்கா, பிரான்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு எதையாவது திறப்பதற்காக அவர் பயணம் செய்தபோது மணிப்பூர் மக்கள் குறித்து அவர் சிறிதும் சிந்திக்கவில்லை.
இப்படி இருக்கையில், தற்போது மணிப்பூரை அவருக்கு ஞாபகப்படுத்தியது எது? என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அம்மாநில பெண்களுக்கு எதிரான கொடூர குற்றத்தின் வீடியோவா? அல்லது அங்கு நடக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்து உச்சநீதிமன்றம் கவனத்தில் கொண்டதே அதுவா?
எப்படியாயினும் பிரதமர் மோடி செய்யவேண்டிய முதல் காரியம் மதிப்பிழந்த பிரேன் சிங்கின் அரசை உடனடியாக டிஸ்மிஸ் செய்து குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவதுதான்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications