போராடிய விவசாயிகள் மீது பிரதமரின் திடீர் கருணை ஏன்? மாற்றத்தை புரிந்துக்கொள்ள வேண்டும்: ப.சிதம்பரம்
பிரதமர் நரேந்திர மோடி 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றதற்கு, அவருக்கு விவசாயிகள் மீதுள்ள அக்கறை, மத்திய அரசு போராடும் விவசாயிகள் மீது கொண்டுள்ள அக்கறை எல்லாம் காரணமல்ல. அடுத்த ஆண்டும் பஞ்சாப், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ளும் அச்சத்தால் தான் இன்று மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறியதாவது:

மனம் திருந்தி எடுத்ததல்ல இந்த முடிவு
வேளாண் சட்டங்களை அரசு விலக்கிக் கொள்ளும் என்ற அறிவிப்பு எதைக் குறிக்கிறது? விவசாயிகளின் தொடர் போராட்டத்திற்குச் செவி மடுக்காத அரசு எதிர்வரும் மாநிலத் தேர்தல்களில் தோல்வி ஏற்படும் என்று அஞ்சி இந்த முடிவை எடுத்திருக்கிறது. இந்த முடிவின் பொருள் பாஜக அரசு தன்னுடைய தவறை உணர்ந்து கொண்டது என்பதல்ல, பிரதமருக்கு உண்மையான மனமாற்றம் ஏற்பட்டது என்பதல்ல. வேளாண் சட்டங்கள் வாபஸ் என்ற அறிவிப்பை நான் வரவேற்கிறேன்.

தேர்தல் தோல்வியை தவிர்க்கவே இந்த முடிவு
தேர்தல் தோல்வியை எப்படித் தவிர்ப்பது என்பது ஒன்றே அவர்கள் குறிக்கோள். இடைத் தேர்தல்களில் தோல்வியைச் சந்தித்த பிறகு பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்தார்களே, அது போலத்தான் இந்த முடிவு. மக்கள் குரலை விட தேர்தல் தோல்வி அச்சமே பாஜக அரசின் போக்கை மாற்றும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்

போராடியவர்கள் தேச விரோதிகள் என்ற பாஜகவின் திடீர் கருணை
பிரதமர் வாபஸ் என அறிவிக்கப்பட்டுள்ள நேரத்தை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். ஏனெனில் ஒரு மாதத்துக்கு முன்னர் வரை வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடுபவர்கள் தேச விரோதிகள் என்று பாஜக விமர்சித்து வந்தது. இப்போது திடீரென இந்த முடிவை எடுக்க தேர்தலைத் தவிர வேறு என்ன காரணம் இருக்க இயலும்.

5 மாநில இடைத்தேர்தல் தோல்வி பயம் காரணம்
கடைசியாக நடந்த மக்களவை, மாநிலங்களை தொகுதி இடைத்தேர்தலில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இப்போது இந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வரவிருக்கும் நிலையில் இப்படியொரு முடிவை எடுத்துள்ளனர். மக்கள் இதனை உணர்த்து பாஜகவுக்கு தொடர் தோல்விகளைத் தர வேண்டும். அப்போதுதான் அவர்கள் மக்கள் விரோதக் கொள்கைகளை எடுப்பதை நிறுத்துவார்கள்.
Recommended Video

போராடிய விவசாயிகள் புத்திசாலிகள்
"இந்த மூன்று வேளாண் சட்டங்களையும் எதிர்த்துப் போராடிய விவசாயிகள் புத்திசாலிகள். அவர்கள் ஒருபோதும் எந்த ஒரு அரசியல் தலைவரும் தங்களின் போராட்ட மேடையில் அனுமதிக்கவில்லை. தங்களின் போராட்டத்திற்கு அரசியல் சாயம் வந்துவிடக் கூடாது என்பதில் அவர்கள் மிகவும் உறுதியாக இருந்தனர்.
அந்த சாதுர்யத்தால் மட்டுமே இந்தப் போராட்டம் ஓராண்டை நெருங்க முடிந்தது. அவர்களின் புத்திசாலித்தனமான போராட்டத்திற்கு இன்று வெற்றி கிடைத்துள்ளது. விவசாயிகளுக்கு நான் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றும் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications