தமக்கு தாமே தடையா? ஒரு ஆர்டர் அனுப்பினாலே போதுமே- ராஜ்நாத்சிங் அறிவிப்பு குறித்து ப.சிதம்பரம்
டெல்லி: வெளிநாடுகளில் இருந்து 101 ராணுவ சாதனங்கள், தளவாடங்கள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்படுவதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அறிவித்துள்ளதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
Recommended Video
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று காலை 10 மணிக்கு முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என முதலில் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து காலை 10 மணிக்கு தமது ட்விட்டர் பக்கத்தில் அடுத்தடுத்து அறிவிப்புகளை வெளியிட்டார் ராஜ்நாத்சிங்.

அதில், 101 ராணுவ சாதனங்கள், தளவாடங்கள் ஆகியவற்றை இறக்குமதி செய்ய தடை விதிப்பதாகவும் பிரதமர் மோடியின் தற்சார்பு இந்தியா கொள்கையை வலிமைப்படுத்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் ராஜ்நாத்சிங் அறிவித்தார். இது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப. சிதம்பரம் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
ராஜ்நாத்சிங் நீட்டி முழக்கி வெளியிட்டிருக்கும் அறிவிப்பு தமக்கு தாமே விதித்திருக்கும் தடைதான். பாதுகாப்பு அமைச்சகம்தான் ராணுவ சாதனங்கள், தளவாடங்களை கொள்முதல் செய்கிறது. அப்படி எனில் தமது அமைச்சக செயலாளர்களுக்கு ஒரு ஆர்டர் அனுப்பி இருந்தாலே போதும். எதற்காக இந்த வெற்று விளம்பர அறிவிப்பு.

அதுவும் 2024 வரை இந்த பொருட்களை நாம் தயாரிக்க முயல்வோம். அதற்கு பின்னரே இறக்குமதிக்கு தடை விதிப்போம் என்றும் கூறியிருக்கிறார் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங். இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications