காஷ்மீர் தாக்குதல்.. ஊர் திரும்பும் தமிழர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் - திருச்சி சிவா
டெல்லி: ஜம்மு காஷ்மீரின் பெஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில் அப்பகுதியிலிருந்து தப்பிய தமிழர்கள் பத்திரமாக ஊர் திரும்ப அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என திமுக எம்பி திருச்சி சிவா கூறியிருக்கிறார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழர் அங்கிருந்து திரும்பி பாதி வழியில் வந்துவிட்டனர். இப்படி வந்துக்கொண்டிருக்கும்போதுதான் தகவல் கிடைத்தது. இதுவுமே கூட முதல்வர் அமைத்திருந்த கட்டுப்பாட்டு அறை மூலமாகதான் நடந்தது. அவசர அழைப்பு எண் வெளியிடப்பட்டிருந்த நிலையில், அந்த எண்ணை வைத்துதான் தொடர்பு கொண்டிருக்கிறார்கள்.

ஒருவேளை அவர்கள் அங்கிருந்து கிளம்பும்போதே எங்களை அழைத்திருந்தால் நிச்சயம் அவர்கள் வீடு திரும்புவதற்கான முழு ஏற்பாடுகளையும் தமிழ்நாடு அரசு முதல்வர் ஆணையின் பெயரில் செய்திருக்கும். ஆனால் அவர்கள் ஏற்கெனவே புறப்பட்டு டெல்லி வந்துவிட்டார்கள். அவர்களை வரவேற்றிருக்கிறோம். உணவு கொடுத்திருக்கிறோம். ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இன்றிரவு அவர்கள் ஊருக்கு புறப்படுகிறார்கள். இப்போதும் காஷ்மீரிலிருந்து தமிழர்கள் தொடர்பு கொண்டால் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வோம்.
காயமடைந்திருப்பவர்கள் உடனடியாக விமானம் மூலம் சொந்த ஊர் அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. ஒருவர் சென்னைக்கு செல்வதாக தகவல் கிடைத்திருக்கிறது. அவ்வளவு தூரம் பயணிக்க அவரது உடல் ஒத்துழைப்பு கொடுத்து, அவர் விரும்பினால் சென்னையில் வைத்து சிகிச்சை அளிக்கப்படும். உடல் நிலை ஒத்துழைக்கவில்லையெனில் அவருக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
அதேபோல விமானத்தில் நான்கு ஐந்து நாட்களுக்கு பின்னர் டிக்கெட் புக் செய்தவர்களுக்கு முன்கூட்டியே தேதி மாற்றப்பட்டிருக்கிறது. பயங்கரவாதிகள் தாக்குதல் காரணமாக அவர்களுக்கு பதைபதைப்பு இருக்கிறது. எனவே உடனடியாக வீடு திரும்ப வேண்டும் என்று விரும்புகின்றனர். அவர்களுக்கு தேவையான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.
அதேபோல தமிழக அரசு சார்பில் புதுக்கோட்டை கூடுதல் ஆட்சியர் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார். அவர் அங்கு சென்று சேர்ந்த பின்னர் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் பற்றி அப்டேட் வெளியாகும். தற்போது ஜம்மு காஷ்மீரில் இருக்கும் தமிழர்கள் உதவி தேவை எனில் உடனடியாக டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் செயல்பட்டு வரும் அவசர கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக அழைக்கலாம். இது 24 மணி நேரமும் செயல்பாட்டில் இருக்கும்" என்று கூறியுள்ளார்.











Click it and Unblock the Notifications