அமர்நாத் யாத்திரை செல்லும் பாதைக்கு அருகே.. வெடிகுண்டுகள் உடன் ஊடுருவிய பாகிஸ்தான் டிரோன்!
டெல்லி: அமர்நாத் யாத்திரை செல்லும் இடத்திற்கு மிக அருகே பயங்கர ஆயுதங்களுடன் பாகிஸ்தான் டிரோன் நுழைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சர்வதேச அளவிலேயே மிகவும் பதற்றமான எல்லைகளில் ஒன்றாக இந்தியா பாகிஸ்தான் எல்லை அமைந்துள்ளது. அதிலும் கொரோனானா பரவலுக்கு பின்னர் கடந்த சில மாதங்களாகவே காஷ்மீரில் இருந்து நடைபெறும் ஊடுருவல் முயற்சி அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக இந்திய- பாகிஸ்தான் எல்லையில் பயங்கரவாதிகள் ஊடுருவலைத் தடுக்கும் வகையில் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகளை இந்திய ராணுவம் தீவிரப்படுத்தி உள்ளது.

பாகிஸ்தான்
பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி ஒரு புறம் என்றால் மறுபுறம் அங்கிருந்து டிரோன்களின் ஊடுருவலும் அதிகரித்து வருகிறது. இந்த டிரோன்களில் ஆயுதங்கள், வெடிகுண்டுகள் மற்றும் போதைப்பொருட்கள் அனுப்பப்படுவதாகக் கூறப்படுகிறது. எனவே, பாகிஸ்தானில் இருந்து வரும் டிரோன்களையும் இந்திய ராணுவத்தினர் கண்காணித்துச் சுட்டு வீழ்த்தி வருகின்றனர். அதுபோல ஒரு சம்பவம் தான் இப்போது காஷ்மீரில் நடந்துள்ளது.

டிரோன்
பாகிஸ்தான் நாட்டில் இருந்து காஷ்மீரின் கதுவாவில் உள்ள ராஜ்பாக் பகுதிக்குத் தாழ்வாக டிரோன் ஒன்று பறந்து வந்துள்ளது. இதைக் கண்டதும் உஷாரான எல்லை பாதுகாப்புப் படையினர், உடனடியாக அந்த டிரோனை சுட்டு வீழ்த்தி உள்ளனர். அதன் பின்னர் அந்த டிரோனை ஆய்வு செய்ததில் அதில் ஏழு கையெறி குண்டுகள் மற்றும் ஏழு மெகனெடிக் குண்டுகள் இருந்ததைப் பாதுகாப்புப் படையினர் கண்டறிந்தனர்.

ரோந்து பணிகள்
தெற்கு காஷ்மீரின் இமயமலையில் உள்ள அமர்நாத் குகை கோவில் யாத்திரையை விரைவில் தொடங்க உள்ள நிலையில், டிரோன் ஊடுருவல் கண்டறியப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாதுகாப்புப் படையினருக்குக் கிடைத்த தகவலின்படி, இந்த குறிப்பிட்ட இடத்திற்குத் தினசரி ரோந்து பணிகளை ராணுவ வீரர்கள் நடத்தி வந்தனர். அதன்படி இன்று நடத்தப்பட்ட ரோந்து பணிகளில் தான் இந்த டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.

அமர்நாத் யாத்திரை
உலக புகழ்பெற்ற அமர்நாத் யாத்திரை ஜூன் 30ஆம் தேதி முதல் இரு வழிகளில் தொடங்க உள்ளது. தெற்கு காஷ்மீர், மற்றும் மத்திய காஷ்மீர் என இரு வழிகளில் இந்த அமர்நாத் யாத்திரை நடைபெற உள்ளது. இந்தச் சூழலில் பயங்கர ஆயுதங்களுடன் கூடிய டிரோன் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், "அமர்நாத் யாத்திரை மீது பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகமாக உள்ளது. ஸ்ரீ அமர்நாத் யாத்திரையைக் குறிவைத்து வெடிகுண்டுகள் அனுப்பப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறோம்" என்றார்.












Click it and Unblock the Notifications