கச்சத்தீவை தொடர்ந்து 'கவ்தார்' துறைமுகம்- ஓமன் கொடுத்தும் நிராகரித்த நேரு.. வரலாறை 'கிளறும்' பாஜக!
டெல்லி: கச்சத்தீவைத் தொடர்ந்து தற்போது பாகிஸ்தான் வசம் இருக்கும் கவ்தார் துறைமுக விவகாரத்தை கிளப்பிவிட்டிருக்கிறது பாஜக. கவ்தார் துறைமுகத்தை ஓமன், இந்தியாவுக்கு தர முன்வந்தும் அப்போதைய பிரதமர் நேரு நிராகரித்ததால் பாகிஸ்தான் வசமானது என்கிற விவாதம் எழுப்பப்படுகிறது.
லோக்சபா தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்தியாவின் வெளி விவகாரங்கள், எல்லை விவகாரங்கள் பேசுபொருளாக பூதாகரமாக கிளம்புகின்றன. 50 ஆண்டுகளுக்கு முந்தைய கச்சத்தீவு பிரச்சனையை திடீரென பாஜக கிளப்பிவிட்டது.

தமிழ்நாட்டு தேர்தல் களத்தை மையமாக வைத்து கச்சத்தீவை பாஜக கிளப்பிவிட்டது. கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்க்க காங்கிரஸும் திமுகவும் காரணம் என்றது பாஜக. ஆனால் காங்கிரஸோ, கச்சத்தீவை கொடுத்து கடல் வளம் மிக்க வெட்ஜ் பேங்க் தீவைத்தானே இலங்கையிடம் பெற்றோம் என்கிறது காங்கிரஸ். திமுகவோ, கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்கக் கூடாது என போராடியது திமுக- தமிழ்நாடு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது திமுக என பதில் கொடுத்தது. மேலும் 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் கச்சத்தீவை மீட்க என்னதான் பாஜக அரசு நடவடிக்கை எடுத்தது என்பதும் காங்கிரஸ் திமுகவின் கேள்வி.
இந்த விவகாரம் ஓய்வதற்குள் அடுத்ததாக கிளம்பி இருப்பதுதான் கவ்தார் துறைமுகம். கவ்தார் துறைமுகம் என்பது தற்போது சர்வதேச அரசியலில் அதி முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உருமாறி நிற்கிறது. கவ்தார் துறைமுக, தற்போது பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளின் கூப்பிடு தொலைவில்தான் கவ்தார் துறைமுகம் இருக்கிறது. கவ்தார் துறைமுகத்தை பாகிஸ்தானிடம் சீனா கையகப்படுத்தி நிலை கொண்டிருக்கிறது. கவ்தார் துறைமுக பாதுகாப்பு என்ற பெயரில் சீன ராணுவம் அங்கே மையம் கொண்டிருக்கிறது. கவ்தார் துறைமுகத்துக்கு போட்டியாக அருகே ஈரானின் சபஹார் துறைமுகத்தில் இந்தியாவும் நிலை கொண்டிருக்கிறது. சரி இங்கே என்ன பிரச்சனை என்கிறீர்கள்?
1950களில் கவ்தார் துறைமுகம் என்பது மிகச் சிறிய ஒரு மீன்பிடி பிரதேசமாக இருந்தது. 1783-ல் இருந்து சுமார் 200 ஆண்டுகள் ஓமன் கட்டுப்பாட்டில் கவ்தார் பிரதேசம் இருந்தது. இந்திய விடுதலைக்குப் பின்னர் கவ்தார் பிரதேசத்தை இந்தியாவுக்கு விற்பனை செய்ய ஓமன் முதலில் பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போதைய பிரதமர் நேரு, ஓமனின் இந்த ஆஃபரை நிராகரித்துவிட்டாராம். அவ்வளவு தொலைவில் நமக்கு ஒரு பிரதேசம் எதற்கு தேவை? என்பதுதான் நேருவின் நிலைப்பாடாக இருந்ததாம். இதனையடுத்துதான் பாகிஸ்தான், கவ்தார் பிரதேசத்தை ஓமனிடம் இருந்து வாங்கிவிட்டதாம்.
இதேபோல கச்சத்தீவு பிரச்சனையின் போது எல்லையில் இருக்கும் தொல்லை பிரதேசம் என நேரு விமர்சித்தார் என்கிறது பாஜக. கச்சத்தீவு போலவே கவ்தார் பிரதேசத்தையும் கைவிட்டார் நேரு என்பது பாஜகவின் விமர்சனம். கச்சத்தீவைத் போல கவ்தார் விவகாரத்திலும் நேரு கோட்டைவிட்டார் என்பதை முன்வைத்து விமர்சிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications