'தீ பிடிக்காத பசையுடன் தீக்குளிப்பு'.. நாடாளுமன்ற தாக்குதல் சதிகாரர்களின் பிளான் C சதித் திட்டம்!
டெல்லி: தீ பிடிக்காத பசையை உடலில் பூசிக் கொண்டு தீக்குளிப்பு சம்பவத்தை அரங்கேற்றவும் நாடாளுமன்ற தாக்குதல் சதிகாரர்கள் சதித் திட்டம் தீட்டியிருந்ததாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
நாடாளுமன்றத்துக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்திய சதிகாரர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த தாக்குதல் சதிகாரர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் 3 வகையான சதித் திட்டங்களை அவர் செயல்படுத்த திட்டமிட்டிருந்தது தெரிய வந்துள்ளது.

நாடாளுமன்ற பார்வையாளர் மாடத்தில் இருந்து சாகர் சர்மா, மைசூர் மனோரஞ்சன் இருவரும் கடந்த புதன்கிழமையன்று லோக்சபாவுக்குள் குதித்து புகை குப்பிகளை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த இருவரையும் எம்.பி.க்கள் சுற்றி வளைத்து தாக்கி மடக்கிப் பிடித்தனர். நாடாளுமன்ற வளாகத்தில் நீலம் தேவி, அமோல் ஷிண்டே இருவரும் புகை குப்பிகளை வீசித் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவங்களை லலித் ஜா என்ற சதிகாரர் வீடியோவாக படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனிடையே 3 வகையான சதித் திட்டங்களுடன் அதாவது பிளான் ஏ, பிளான் பி, பிளான் சி என தாக்குதல் சதிகாரர்கள் நாடாளுமன்றத்துக்கு வந்துள்ளனர்; நாடாளுமன்ற பார்வையாளர் மாடத்தில் இருந்து குதித்து புகை குப்பிகளை வீசி தாக்குதல் நடத்துவது; துண்டு பிரசுரங்களை வீசுவது; இவற்றை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிடுவது பிளான் ஏ, பிளான் பி ஆகியவை. 3-வது சதித் திட்டம்தான் தீக்குளிப்பு நாடகம் நடத்துவது. அதாவது தீ பிடித்துவிடாத பசையை உடலில் பூசிக் கொண்டு தீக்குளிப்பு நாடகம் நடத்துவதற்கும் இந்த சதிகாரர்கள் சதித் திட்டம் தீட்டி இருந்தனர் என்கின்றனர் டெல்லி போலீசார்.
இந்த தாக்குதல் சதிகாரர்களுக்கும் இவர்கள் நாடாளுமன்றத்தில் நுழைவதற்கு அனுமதி சீட்டு பெற்றுக் கொடுத்த பாஜக எம்பி பிரதாப் சிம்ஹாவுக்கான தொடர்பு குறித்தும் டெல்லி போலீசார் விசாரிக்க உள்ளனர். பிரதமா சிம்ஹாவை அழைத்து அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யவும் டெல்லி போலீசார் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications