நாடாளுமன்ற நிலைக்குழுக்கள் மாற்றி அமைப்பு.. காங். தலைவர்களுக்கு வாய்ப்பு.. கனிமொழிக்கு முக்கிய பதவி
டெல்லி: 2021-22ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுக்கள் மாற்றி அமைக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பல்வேறு காங்கிரஸ் உறுப்பினர்களின் பதவிகள் நீட்டிக்கப்பட்டுள்ளன.
2021-22ம் ஆண்டுக்கான புதிய நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. மக்களவை தலைவர் ஓம் பிர்லா, மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு ஆகியோரின் ஆலோசனைக்கு பிறகு இந்த உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாற்றியமைக்கப்பட்ட நிலைக்குழு கடந்த மாதம் 13ம் தேதியே நடைமுறைக்கு வந்துவிட்டது.
ஆனாலும் இன்றுதான் இதற்கான முழு அறிவிப்பு வெளியானது. பல்வேறு செயல்பாடுகளின் அடிப்படையில் இந்த உறுப்பினர்கள் தேர்வு நடைபெற்று உள்ளது.

உறுப்பினர்கள் தேர்வு எப்படி
பொதுவாக நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் செயல்பாட்டை வைத்து நிலைக்குழுவில் அவர்களுக்கு பதவி வழங்கப்படும். மிக முக்கியமாக உறுப்பினர்களின் வருகை பதிவேடு சோதிக்கப்படும். உறுப்பினர்கள் சரியாக நாடாளுமன்ற அவைக்கு வருகிறார்களா விவாதங்களில் கலந்து கொள்கிறார்களா என்று சோதனை செய்யப்படும். இதன் அடிப்படையிலேயே பதவிகள் வழங்கப்படுவதும், நீக்கப்படுவதும் முடிவு செய்யப்படும்.

பதவி
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் பல்வேறு உறுப்பினர்களுக்கு நாடாளுமன்ற நிலைக்குழுவில் பதவி நீட்டிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் சசி தரூர் தொடர்ந்து நாடாளுமன்ற ஐடி துறை நிலைக்குழு தலைவராக தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கு எதிராக பாஜக உறுப்பினர்கள், தலைவர்கள் பலர் கடும் விமர்சனங்களை வைத்து வந்தனர். இந்த பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கைகளை வைத்து வந்தனர்.

நீட்டிப்பு
ஆனால் அவருக்கு தொடர்ந்து பதவி நீட்டிக்கப்பட்டுள்ளது. பொது மற்றும் தனி குறை தீர்ப்பு நிலைக்குழு, சட்ட ஒழுங்கு நிலைக்குழு தலைவராக முன்னாள் பீகார் முதல்வரும் பாஜக எம்பியுமான சுஷில் குமார் மோடி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பொறுப்பில் புபேந்திர யாதவ் பதவி வகித்த நிலையில் அவர் தற்போது பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

பதவி யாருக்கு?
அதேபோல் பாஜகவின் ஜூயால் ஓரம் பாதுகாப்பு துறை நிலைக்குழுவின் தலைவராக தொடர்வார். இதில் ராகுல் காங்கிரஸ் உறுப்பினராக நீடிப்பார். காங்கிரஸ் எம்பி ஆனந்த் சர்மா உள்துறை நிலைக்குழுவின் தலைவராக நீடிப்பார். ஜெய்ராம் ராமேஷ் அறிவியல் மற்றும் தொழில்நுடபம், சுற்றுசூழல், காடுகள், காலநிலை மாற்ற நிலைக்குழு தலைவராக தொடர்வார்.

பாஜக எம்பி
பாஜக எம்பியும் முன்னாள் அமைச்சகருமான் ரவி சங்கர் பிரசாத் பொருளாதார நிலைக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். சட்டம் ஒழுங்கு நிலைக்குழு உறுப்பினராக ரமேஷ் பொக்ரியால் நியமிக்கப்பட்டுள்ளார். பாஜகவின் முன்னாள் அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேக்கர் வெளியுறவுத்துறை நிலைக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கள் மூவரும் முன்பு அமைச்சர்களாக இருந்து நீக்கப்பட்டு தற்போது நிலைக்குழுவில் பதவி வழங்கப்பட்டுள்ளது.

நியமனம்
தகவல் தொழில்நுட்ப நிலைக்குழுவின் உறுப்பினராக முன்னாள் தலைமை நீதிபதி எம்பி ரஞ்சன் கோகாய் நியமிக்கப்பட்டுள்ளார். கெமிக்கல் மற்றும் உரத்துறையின் நிலைக்குழு உறுப்பினராக திமுக எம்பி கனிமொழி நியமிக்கப்பட்டுள்ளார். 237 மாநிலங்களவை உறுப்பினர்களை நிலைக்குழுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். 50 பேர் நிலைக்குழு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நிலைக்குழுவிற்கு வராத பலர் உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications