ஜுன் 17-ல் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்... ஜுன் 19-ல் சபாநாயகர் தேர்வு
டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற பின் முதல் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டதொடர் வரும் ஜுன் 17ம் தேதி தொடங்குகிறது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்துள்ளது. பாஜக மட்டுமே 303 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மை பெற்று அசத்தி உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை தேசிய ஜனநாயக கூட்டணி அமைச்சரவை நேற்று பொறுப்பேற்றது. இன்று பிரதமர் மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட அனைத்து அமைச்சர்களும் தங்கள் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டனர்.
அதன் பின்னர் பிரதமர் மோடி தலைமையிலான புதிய கேபினட் அமைச்சரவை கூட்டம் பிரதமர் அலுவலகத்தில் நடந்தது. அப்போது பல்வேறு விஷயங்கள் மற்றும் வளர்ச்சி பணிகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
இந்நிலையில் புதிய அரசு பொறுப்பேற்ற நிலையில், 17வது மக்களவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஜுன் 17ம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜுன் 17ம் தேதி முதல் ஜுலை 26ம் தேதி வரை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜுன் 19ம் தேதி மக்களவைக்கு சபாநாயகர் தேர்வு செய்யப்பட உள்ளார். அதன் பிறகு கூட்டத்தொடர்கள் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை புதிய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது.இந்த பட்ஜெட்டை தமிழகத்தைச் சேர்ந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.இந்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் காரணமாக பியூஸ் கோயல் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து இருந்தார்.
இந்த பட்ஜெட்டில் பல முக்கியமான அறிவிப்புகளை பிரதமர் மோடியின் அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications