Parliament: இன்று 2வது நாளாக கூடும் நாடாளுமன்றம்.. மிக முக்கிய மசோதாவை கொண்டு வரும் மத்திய அரசு!
டெல்லி: நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் நேற்றைய தினம் ஆரம்பித்தது. இருப்பினும், முதல் நாளான நேற்று எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்றம் முடங்கியது. இந்தச் சூழலில் தான் இரண்டாவது நாளாக நாடாளுமன்றம் இன்று கூடுகிறது. இன்று கலால் வரி தொடர்பான மசோதாவை மத்திய அரசு கொண்டு வரும் எனத் தெரிகிறது.
நமது நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெறும். அதன்படி நேற்றைய தினம் குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கியது. காலை 11 மணிக்கு லோக்சபா கூடியதும், மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதையடுத்து SIR பணிகளைக் கண்டித்தும் அது குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தியும் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் கோரிக்கை விடுத்தனர். இருப்பினும், இதைச் சபாநாயகர் ஏற்கவில்லை. இதையடுத்து அவையில் அமளி ஏற்பட்டது. லோக்சபா முதலில் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்ட சூழலில், பிறகு நாள் முழுக்க ஒத்திவைக்கப்பட்டது.
ராஜ்யசபாவை பொறுத்தவரை துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெறும் முதல் கூட்டத்தொடர் இதுவாகும். இதனால் பிரதமர் மோடி நேற்றைய தினம் அவரை வரவேற்றுப் பேசினார். தொடர்ந்து ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவரான கார்கேவும் சிபி ராதாகிருஷ்ணனை வரவேற்றுப் பேசினார். பிறகு அங்கும் அமளி ஏற்பட்டது.
இதனால் அவை நடவடிக்கைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால் மணிப்பூர் ஜிஎஸ்டி மசோதா குறித்து நடைபெற இருந்த விவாதம் நடக்கவில்லை. இறுதியில் குரல் வாக்கெடுப்பு மூலம் மட்டுமே அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வேறு எந்தவொரு முக்கிய விவாதம் நடைபெறவில்லை. இந்தச் சூழலில் தான் நாடாளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு இன்று கூடுகிறது.
இரண்டாவது நாளான இன்று 1944ஆம் ஆண்டு மத்தியக் கலால் வரிச் சட்டத்தைத் திருத்துவதற்கான மசோதாவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்மொழிவார் என எதிர்பார்க்கப்படுகிறது.. இதன் காரணமாகப் புகையிலை, பான் மசாலா உள்ளிட்ட பொருட்களின் வரி உயர்த்தப்படும். இந்த மசோதாவுக்குப் பெரியளவில் எதிர்ப்புகள் இருக்காது என்றே தெரிகிறது.
அதேநேரம் சார் பணிகள், டெல்லி காற்று மாசு உள்ளிட்டவை குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்துவதால் இன்றும் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்படலாம் என அஞ்சப்படுகிறது.












Click it and Unblock the Notifications